டியர் அல்போன்ஸ் புத்திரன்... : வைரலாகும் சுதா கொங்கராவின் பதிவு!
இயக்குநர் சுதா கொங்கரா பிரேமம் இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன் குறித்து உருக்கமாக பதிவிட்டுள்ளார்.
‘நேரம்' படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் அல்போன்ஸ் புத்திரன். அவர் இயக்கிய மலையாள படமான 'பிரேமம்' தமிழகத்தில் நல்ல வரவேற்பை பெற்றது. கிட்டத்தட்ட 7 ஆண்டுகளுக்குப் பிறகு அல்போன்ஸ் இயக்கிய 'கோல்டு' கலவையான விமர்சனங்களை பெற்றது.
கோல்டு படம் அமேசான் ப்ரைம் ஓடிடியில் கடந்தாண்டு டிசம்பர் 29ஆம் நாள் வெளியானது. தற்போது கிப்ஃட் எனும் படத்தினை இயக்கி வருகிறார்.
இதையும் படிக்க: 23 வருடங்களுக்குப் பிறகு வைரலான கரு கரு கருப்பாயி பாடல்: பாடகி நெகிழ்ச்சி!
Advertisement
Advertisement
“சினிமா திரைப்படங்களை இயக்குவதில் இருந்து விலகுகிறேன். எனக்கு ஏஎஸ்டி (ஆடிஸம் ஸ்பெக்ட்ரம் டிஸ்ஆர்டர்) உள்ளதை நானே நேற்றுதான் கண்டறிந்தேன். நான் யாருக்கும் பாரமாக இருக்க விரும்பவில்லை. நான் தொடர்ந்து பாடல், விடியோக்கள், குறும்படங்கள் மற்றும் முடிந்தால் ஓடிடியில் படங்களை இயக்குவேன்” என அல்போன்ஸ் புத்திரன் நேற்று இன்ஸ்டாவில் பதிவிட்டு பின்னர் நீக்கியிருந்தார்.
இதையும் படிக்க: லியோ இதுவரை வசூல் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
இந்நிலையில், இறுதிச் சுற்று, சூரரைப் போற்று படங்களின் இயக்குநர் சுதா கொங்கரா தனது எக்ஸ் பதிவில், “டியர் அல்போன்ஸ் புத்திரன், நான் உங்களது சினிமாக்களை மிகவும் மிஸ் செய்யப் போகிறேன். பிரேமம் படம் எனக்கு எப்போதும் பிடித்த படங்களின் வரிசையில் இருக்கும்.
நான் சோர்வாக இருக்கும்போதெல்லாம் என்னை உயிர்ப்புடன் வைக்கும் படமும் அதுவே. நான் அந்தப் படத்தினை பலமுறை தொடர்ந்து பார்த்துள்ளேன். காதலில் இருப்பது என்ற யோசனையின் மீது மீண்டும் காதல் கொள்ளச் செய்கிறது. தயவுசெய்து எந்த வடிவிலாவது சினிமாவை தொடருங்கள்; நான் ரசித்துக் கொள்கிறேன். அன்புடன் சுதா” எனக் கூறியுள்ளார்.