23 வருடங்களுக்குப் பிறகு வைரலான கரு கரு கருப்பாயி பாடல்: பாடகி நெகிழ்ச்சி!
லியோ படத்தின் மூலமாக மீண்டும் கரு கரு கருப்பாயி பாடல் வைரலானதுக்கு நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார் பாடகி அனுராதா ஸ்ரீராம்.
கே. சுபாஷ் இயக்கத்தில் பிரபுதேவா நடிப்பில் 2000இல் வெளியான ஏழையின் சிரிப்பில் படத்தில் வரும் கரு கரு கருப்பாயி பாடல் இன்ஸ்டாகிராம், பேஸ்புக், யூடியூப் என சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. லியோ படத்தில் இந்தப்பாடலை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தனக்கேயுரிய பாணியில் அழகாக சண்டைக் காட்சிக்கு உபயோகப்படுத்தியிருப்பார்.
கரு கரு கருப்பாயி பாடலுக்கு இசையமைத்தவர் தேவா. பாடியவர்கள் - அனுராதா ஸ்ரீராம், உன்னி மேனன். ரோஜா, பிரபுதேவா நடனமாடியிருப்பார்கள்.
லியோ படம் அக்.19ஆம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது. இந்நிலையில் பாடகி அனுராதா ஸ்ரீராம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கருகருப்பாயி பாடல் குறித்து நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார். அந்தப் பதிவில் கூறியதாவது:
Advertisement
பிரபலமான ஆங்கில கவிஞர் ஜான் கீட்ஸ் சொல்வது போல ஒரு பொருளின் அழகு என்பதே அது எப்போதும் மகிழ்ச்சியை தரக்கூடியதாக இருக்கும்போதுதான். 23 வருடங்களுக்குப் பிறகு கருகருகருப்பாயி பாடல் வைராலகும்போது ஜான் கீட்ஸ் சொல்லியதுதான் ஞாபகத்துக்கு வருகிறது.
லியோ படத்தில் இந்தப் பாடலை பயன்படுத்தியதற்காக இயக்குநர் லோகேஷ் கனகராஜுக்கு இதயம் கனிந்த நன்றி. படத்தின் முக்கியமான நேரத்தில் தளபதி விஜய்யின் அற்புதமான நடனம் கதையை சண்டைக்காட்சிக்கு நகர்த்தும் விதமும் இன்னொரு கதாபாத்திர அறிமுகத்துக்கும் அருமையாக இருந்தது.
23 வருடங்களுக்கு முன்பு தேவா சார் இசையமைத்து அதற்கு பிரபுதவா-ரோஜா நடனம் ஆடியதும் அந்தப் பாடலுக்கு ஒரு அற்புதம் நிகழ்ந்தது. லியோ படத்தில் சிறப்பாக காட்சியமைத்த லோகேஷ் கனகராஜுக்கு மீண்டும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
தனிப்பட்ட முறையில் எனது 2 குழந்தைகளுக்கும் நான் லோகேஷ் படத்தில் அனிருத் இசையில் தளபதி விஜய்க்காக மீண்டும் பாடல் பாட வேண்டும் என மிகுந்த ஆசை இருந்தது. கடவுள் அதனை ஒரே காட்சியில் நிகழ்த்திவிட்டார். அண்ணாமலையாருக்கு நன்றிக்கடன்பட்டுள்ளேன். எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.