மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்ற 'ரோஜா' தொடரில் நடித்து ரசிகர்களிடையே பிரபலமானவர் பிரியங்கா நல்காரி. இத்தொடர் டிஆர்பி பட்டியலில் முதலிடத்தில் நீடித்து வந்தது.
இதனிடையே பிரியங்கா நல்காரி, தொழிலதிபர் ராகுல் வர்மாவை கடந்தாணடு மார்ச் 23 ஆம் தேதி திருமணம் செய்துகொண்டார். இவர்களின் திருமணம் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் கோயிலில் நடைபெற்றது.
திருமணத்துக்குப் பிறகு வெளிநாட்டில் கணவருடன் வாழ்ந்து வந்தார். இதனிடையே தமிழ்நாட்டில் நடக்கும் படப்பிடிப்புக்கு வந்து செல்ல சிரமமாக இருப்பதாக அவர் தரப்பில் கூறப்பட்டது. இதனால் தொடரிலிருந்து அவர் விலகுவதாக பிரியங்கா அறிவித்தார். ஆனால், தற்போது அவர் நளதமந்தி தொடரில் நடித்து வருகிறார்.
இன்ஸ்டாகிராமில் எப்போதும் சுறுசுறுப்பாக இருக்கும் பிரியங்கா நல்காரி, தனது கணவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் மற்றும் விடியோக்களை இண்டாகிராம் பக்கத்தில் இருந்து சமீபத்தில் நீக்கினார். அதேபோல், அவரது கணவரும் பிரியங்காவுடன் இருக்கும் புகைப்படங்களை நீக்கினார்.
இந்த நிலையில், பிரியங்கா நல்காரியும் அவரது கணவர் ராகுல் வர்மாவும் பிரிந்ததாக தகவல் பரவி வருகிறது. ஆனால், இவர்களின் தரப்பில் இருந்து எந்தவிதமான கருத்தும் இதுவரை வெளியாகவில்லை.
இண்டாகிராம் உரையாடலில் பிரியங்கா நல்காரியிடம் ரசிகர் ஒருவர் நீங்கள் சிங்கிளா என்ற கேள்விக்கு 'ஆமாம் நான் சிங்கிள்' எனப் பதிலளித்தது குறிப்பிடத்தக்கது.