வயநாடு நிலச்சரிவு: நிவாரணப் பணியில் நிகிலா விமல்!
வயநாடு நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்கள் வழங்கும் பணியில் நடிகை நிகிலா விமல் ஈடுபட்டுள்ளார்.
கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில், முண்டைக்கை உள்ளிட்ட சில ஊர்களில் அனைத்தும் மண்ணால் மூடப்பட்டு, படுபயங்கர போர்க்களம் போல மாறிநிற்கிறது.
மிக மோசமாக நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட முண்டக்கையில், சில கிலோ மீட்டர் தூரம் வரை மக்கள் வாழ்ந்த தடயமே இல்லாமல் ஒரு ஊரையே காணவில்லை என்று மக்கள் வேதனையுடன் புலம்பி வருகின்றனர்.
இந்த பாதிப்பால், இதுவரை 170க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதும் இந்தியளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதனால், பாதிக்கப்பட்ட பகுதிகளில் ராணுவம் மற்றும் பேரிடர் மீட்புக்குழுவினர் இரவு பகலாக மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதேநேரம், பல தன்னார்வ அமைப்புகளும் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு மற்றும் உடைகளை விநியோகித்து வருகின்றனர்.
இந்த நிலையில், நடிகை நிகிலா விமல் இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தினருடன் இணைந்து நிவாரணப் பொருள்கள் வழங்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்.