சிறந்த இடத்தில் மலையாள திரைப்படங்கள்! விஜய் சேதுபதி 2 முறை பார்த்த படம் எது தெரியுமா?
மலையாள சினிமா குறித்து புகழ்ந்து பேசிய நடிகர் விஜய்சேதுபதி.
நடிகர் விஜய் சேதுபதியின் 50வது படமாக 'மகாராஜா' உருவாகியுள்ளது. குரங்கு பொம்மை படத்தை இயக்கிய நித்திலன் சாமிநாதன் இப்படத்தை இயக்கியுள்ளார். சுதன் சுந்தரம் மற்றும் ஜெகதீஷ் பழனிச்சாமி இணைந்து தயாரித்துள்ளனர்.
பான் இந்தியா படமாக உருவாகும் இப்படத்தில் அனுராக் காஷ்யப், மம்தா மோகன்தாஸ், நட்டி, முனிஷ்காந்த், சிங்கம் புலி, பாரதிராஜா, வினோத் சாகர், பி.எல்.தேனப்பன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இந்தப் படத்துக்கு அஜனீஷ் லோக்நாத் இசையமைத்துள்ளார். இப்படத்தின் முதல் டிரைலர் வெளியாகி கவனம் பெற்றதுடன் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.
Advertisement
இந்தப்படம் நாளை (ஜூன் 14) வெளியாகிறது. இதன் புரமோஷனுக்காக நடிகர் விஜய் சேதுபதி பல நேர்காணல்கள் அளித்து வருகிறார். சமீபத்திய நேர்காணல் ஒன்றில் விஜய் சேதுபதி பேசியதாவது:
மலையாள திரைப்படங்கள் தற்போது சிறந்த இடத்தில் இருக்கின்றன. நான் பிரேமலு படத்தினை இரண்டு முறை பார்த்தேன். மிகவும் அழகாக இருந்தது. நாயகன், நாயகி மட்டுமல்ல படத்தில் இருந்த அனைவருமே மிகவும் அற்புதமாக இருந்தார்கள்.
மம்மூட்டியின் பிரம்மயுகம் படமும் சிறப்பாக இருந்தது. சமீபத்தில் அதிகமாக மலையால சினிமாக்களை பார்க்கிறேன். அவை அனைத்துமே எனக்கு பிடித்திருந்தது என்றார்.
நகைச்சுவை கலந்த காதல் திரைப்படமாக உருவான பிரேமலு கடந்த பிப்.9 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இப்படம் இதுவரை உலகளவில் ரூ.100 கோடிக்கும் அதிகமாக வசூலித்து அசத்தியுள்ளது. தமிழ், தெலுங்கு டப்பிங்கில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.
டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் கடந்த ஏப்.12 ஆம் தேதி வெளியாகி, ஓடிடியிலும் நல்ல வரவேற்பினைப் பெற்று வருகிறது.
மம்மூட்டியின் டர்போ படத்தில் விஜய் சேதுபதி சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.