ஜி.வி.பிரகாஷைப் பிரிந்தார் சைந்தவி: அதிகாரபூர்வ அறிவிப்பு!
பாடகி சைந்தவி இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் உடனான திருமண உறவிலிருந்து பிரிவதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.
ஜி.வி.பிரகாஷ் மற்றும் சைந்தவி ஆகியோர் தமிழ்த் திரைப்படத்துறையில் இசை உலகில் பிரபலமான தம்பதிகள் ஆவர். இவர்கள் 2013-இல் திருமணம் செய்து கொண்டனர், இவர்களுக்கு அன்வி என்ற மகளும் உள்ளார்.
ஜி.வி.பிரகாஷ் - சைந்தவிக்கு திருமணமாகி பத்து ஆண்டுகளுக்கும் மேலாகிறது. 2023-ஆம் ஆண்டில் தனது திருமண நாளில் தனது கணவருக்கு திருமணநாள் வாழ்த்தை வெளியிட்ட சைந்தவி, இந்த ஆண்டு அத்தகைய எந்த இடுகையையும் வெளியிடவில்லை.
தமிழ்த் திரையுலகின் காதல் தம்பதிகள் சமீபத்தில் விவாகரத்து அறிவிப்புடன் தங்கள் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை தருகின்றனர். சமீபத்தில் இவர்கள் பிரிவதாக வதந்திகள் வந்துகொண்டிருந்தன.
இந்நிலையில் பாடகி சைந்தவி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இதனை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். இதில், “11 ஆண்டுகளுக்குப் பிறகு நானும் ஜி.வி.யும் திருமண உறவிலிருந்து பிரிவதாக முடிவெடுத்துள்ளோம். எங்களது மன நிம்மதிக்காகவும் முன்னேற்றத்துக்காகவும் இந்த முடிவு எடுக்கப்படுகிறது.
இதுதான் எங்களுக்கு சிறந்த முடிவாக இருக்கும். இந்த நேரத்தில் உங்களது ஆதரவுக்கும் புரிதலுக்கும் மிக்க நன்றி.
ரசிகர்கள், பத்திரிகையாளர்கள் தங்களது முடிவுக்கு மதிப்பளிக்க வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.