கேரள திரைப்பட விழாவில் 15 சர்வதேச படங்கள் முடக்கம்! மத்திய அனுமதி மறுப்பு!
கேரள சர்வதேச திரைப்பட விழாவில் தேர்வான 15 படங்களுக்கு மத்திய அரசு அனுமதி மறுத்துள்ளது குறித்து...
கேரள சர்வதேச திரைப்பட விழாவில் தேர்வான, பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 15 திரைப்படங்களைத் திரையிடுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருவனந்தபுரத்தில், 30 ஆவது கேரள சர்வதேச திரைப்பட விழா நடைபெற்று வருகின்றது. கடந்த டிச.12 முதல் வரும் டிச.19 ஆம் தேதி வரை நடைபெறும் இந்த விழாவில், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த திரைப்படங்கள் திரையிடப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், விழாவில் திரையிடுவதற்காகத் தேர்வு செய்யப்பட்ட சுமார் 15 படங்களுக்கு மத்திய தகவல் மற்றும் ஒளிப்பரப்பு அமைச்சகம் அனுமதி மறுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே, விழாவுக்குத் தேர்வான 19 திரைப்படங்கள் முடக்கப்பட்டிருந்த நிலையில், ‘பீஃப்’, ‘ஈகல்ஸ் ஆஃப் ரிபப்ளிக்’, ‘ஹார்ட் ஆஃப் தி வுல்ஃப்’, ‘ஒன்ஸ் அப்பான் எ டைம் இன் காஸா’ போன்ற 4 படங்கள் மட்டும் தற்போது திரையிட அனுமதிக்கப்பட்டுள்ளன.
இருப்பினும், இந்த நடவடிக்கைகளுக்கான காரணம் குறித்து மத்திய அரசு அதிகாரிகள் விளக்கமளிக்கவில்லை என திரைப்பட விழா ஒருங்கிணைப்பாளர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
இதில், பெரும்பாலும் பாலஸ்தீன விவகாரம் குறித்த கதைகளத்துடன் உருவான படங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இத்துடன், மத்திய அரசின் அனுமதிக்காகக் காத்திருக்கும் திரைப்படங்களின் பட்டியலில் மறைந்த புகழ்பெற்ற சோவியத் இயக்குநர் செர்ஜி ஐசென்ஸ்டீனின் 100 ஆண்டுகள் பழமையான “பேட்டில்ஷிஃப் பொட்டெம்கின்” எனும் திரைப்படமும் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: மகாத்மா காந்தி என் குடும்பத்தைச் சேர்ந்தவர் அல்ல; ஆனால்...! - பிரியங்கா காந்தி பேச்சு