முகப்பு
செய்திகள்

ஆஸ்கர் விருதை பாலியல் தொழிலாளிகளுக்கு சமர்ப்பிக்கிறேன்: அனோரா இயக்குநர்

ஆஸ்கர் விருது வென்ற அனோரா இயக்குநரின் பேச்சு வைரலாகியுள்ளது...

Updated On : 3 மார்ச் 2025, 4:00 pm IST
அனோரா இயக்குநர் சான் பேகர்
பகிர்:

ஆஸ்கர் விருதுபெற்ற அனோரா படத்தின் இயக்குநர் தன் விருதை பாலியல் தொழிலாளிகளுக்கு சமர்ப்பிப்பதாகத் தெரிவித்துள்ளார்.

2025-ம் ஆண்டுக்கான 97-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரின் டால்பி அரங்கில் கோலாகலமாக நடைபெற்றது. விருது விழாவை நகைச்சுவை நடிகர் கேனன் ஓ பிரைன் தொகுத்து வழங்கினார்.

இதில் சிறந்த திரைக்கதை, படத்தொகுப்பு, இயக்குநர், நடிகை, திரைப்படம் என மொத்தமாக 5 விருதுகளை அனோரா திரைப்படம் குவித்தது.

Advertisement

Advertisement

ஆச்சரியமாக சிறந்த இயக்குநர், திரைக்கதை, படத்தொகுப்பு, சிறந்த படம் இயக்குநர் சான் பேகர் 4 ஆஸ்கர் விருதுகளை வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளார்.

விருது வென்ற பின் பேசிய சான் பேகர், “ஐந்து வயதில் என் அம்மா எனக்கு சினிமாவை அறிமுகப்படுத்தினார். இன்று அவரின் பிறந்த நாளில் ஆஸ்கர் விருதைப் பெறுகிறேன். சுயாதீன படமான (independent film) அனோராவுக்கு விருது கிடைத்ததில் மகிழ்ச்சியடைகிறேன். சினிமா படைப்பாளிகள் பெரிய திரைகளுக்கான படங்களை உருவாக்குங்கள். அது, என்னால் முடிந்திருக்கிறது.

இடைபட்ட காலங்களில் தங்கள் கதைகளையும் வாழ்க்கையையும் என்னிடம் பகிர்ந்த பாலியல் தொழிலாளிகளுக்கு நன்றி சொல்கிறேன். மிகுந்த மரியாதையுடன் இந்த விருதை அவர்களுக்கு சமர்ப்பணம் செய்கிறேன். பாலியல் தொழிலாளர்களும் காதல் உள்பட பல உணர்ச்சிகள் மிகுந்த மனிதர்கள்தான் என்பதையே அனோரா பேசுகிறது. இந்த நேரத்தில், பாலியல் தொழிலை குற்றமற்றதாக மாற்ற வேண்டும் என விரும்புகிறேன்” என்றார்.

பெண் பாலியல் தொழிலாளியான நாயகிக்கு வரும் காதலை மையப்படுத்தியே அனோரா திரைப்படம் உருவாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.