காந்தாரா சேப்டர் - 1 வெளியீடு எப்போது? படக்குழு விளக்கம்
காந்தாரா சேப்டர் - 1 வெளியீடு பற்றி...
காந்தாரா சேப்டர் - 1 வெளியாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக வெளியான தகவலைத் தொடர்ந்து, படக்குழுவினர் விளக்கம் அளித்துள்ளனர்.
கன்னட நடிகர் ரிஷப் ஷெட்டியின் இயக்கத்தில் தொன்மக் கதையை மையமாகக் கொண்டு உருவான திரைப்படம் ‘காந்தாரா’. 90-களில் நடக்கும் நில உரிமையும் அதனால் ஏற்படும் பிரச்னைகளுமாக படம் உருவாகியிருந்தது.
கன்னட வரவேற்பை தொடர்ந்து தமிழ், ஹிந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளிலும் இப்படம் வெளியாகி மொத்தம் ரூ.400 கோடிக்கும் மேல் வசூலித்து பலரையும் ஆச்சரியப்படுத்தியது.
Advertisement
படத்தை இயக்கி, நடித்த ரிஷப் ஷெட்டி சிறந்த நடிகருக்கான தேசிய விருதை வென்று அசத்தினார். இதனைத் தொடர்ந்து, காந்தாரா படத்தின் இரண்டாம் பாகமான ’காந்தாரா சேப்டர் - 1’ படப்பிடிப்பு தொடங்கியது.
இந்தப் படம் வருகின்ற அக்டோபர் 2 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், படப்பிடிப்பில் தாமதம் ஏற்பட்டதாக தகவல்கள் பரவி வந்தன. இதனால், திட்டமிட்டபடி இந்தாண்டு படம் வெளியாகாது என்று கூறப்பட்டது.
இந்த நிலையில், திட்டமிட்டபடி படப்பிடிப்பு நடந்து வருவதாகவும் வதந்திகளை நம்பவேண்டாம், எங்களை நம்புங்கள், திட்டமிட்டபடி அக்டோபர் 2 ஆம் தேதி உலகளவில் காந்தாரா வெளியாகும் என்று படக்குழு பதிவிட்டுள்ளது.