கதை திருடப்பட்டதா? சக்தித் திருமகன் இயக்குநர் விளக்கம்!
சக்தித் திருமகன் கதை சர்ச்சை குறித்து இயக்குநர் விளக்கம்...
இயக்குநர் அருண் பிரபு சக்தித் திருமகன் கதை திருடப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டுக்கு பதிலளித்துள்ளார்.
நடிகர் விஜய் ஆண்டனியின் 25-வது படமாக உருவான சக்தித் திருமகன் படத்தை, விஜய் ஆண்டனி தயாரிக்க அருண் பிரபு எழுதி இயக்கியிருந்தார்.
இப்படம் கடந்த செப். 19 திரைக்கு வந்தது. ஊழல் செய்யும் அரசியல்வாதிகளைக் கேள்விகேட்கும் கதாபாத்திரத்தில் விஜய் ஆண்டனி நடித்திருந்தார். கதையும் திரைக்கதையும் நன்றாக இருந்ததால் ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களைப் பெற்றது. தற்போது, ஓடிடியில் வெளியாகி கவனம் பெற்று வருகிறது.
Advertisement
Advertisement
இப்படத்தின் கதை தன்னிடமிருந்து திருடப்பட்டதாக முகநூலில் சுபாஸ் சுந்தர் என்பவர் குற்றச்சாட்டை முன்வைத்ததுடன் அவர் எழுதிய கதையும் சக்தித் திருமகன் கதையும் ஒற்றுப்போனது சர்ச்சையைக் கிளப்பியது.
இந்த நிலையில், இயக்குநர் அருண் பிரபு பதிவொன்றை வெளியிட்டுள்ளார். அதில், “ 2014-ல் இருந்தே எழுதப்பட்ட கதைதான் சக்தித் திருமகன். பராசக்தி என்ற தலைப்பில் கிட்டு என்ற கதாபாத்திரமும், அவன் தலைமைச் செயலகத்தில் தரகர் வேலையில் ஈடுபடுபவன் என்பதும், பெரியாரிஸ்ட் சுவரெழுத்து சுப்பையாவின் வளர்ப்பில் வளர்க்கப்பட்ட ஒரு சிறுவன் - மக்களைக் கேள்வி கேட்க தூண்டுகிறான் என்பதும், எட்ட முடியாத இடத்தில் இருக்கும் ஒரு பலம் பெற்ற வில்லனும் -அப்போதே எழுதப்பட்டது. காலசூழலுக்கேற்ப அரசியல் மாற்றங்களுக்கு ஏற்ப திரைக்கதையை முடித்து பல போராட்டங்களுக்குப் பின் இன்றுதான் 2025 இல் அது மக்களிடம் சென்றடைந்திருக்கிறது.
சில நாள்களாகச் சமூக வலைதளங்களில் சக்தித் திருமகன் திருட்டுக் கதை எனவும் அது 2022-லேயே எழுதப்பட்ட இன்னொருவரின் கதை என்றும் யாரோ சொல்லியிருக்கிறார். மேலும், அவர் 2022 இல் டிரீம் வாரியர் பிக்சர்ஸ்க்குக் கொடுத்த கதைக்கருவைத் திருடி எழுதப்பட்டதே சக்தித் திருமகன் என்றும் குறிப்பிட்டிருக்கிறார். இது முற்றிலும் தவறு. சதி.
2014 ஆம் வருடத்திலிருந்து இத்திரைக்கதை தொடர்பாக என்னிடம் எல்லா சாட்சியங்களும் உள்ளன. மின்னஞ்சல் பகிர்வுகள், தயாரிப்பாளர்கள், நடிகர்களுக்கு அனுப்பிய திரைக்கதைப் பகிர்வுகள், பதிவுச் சான்றிதழ்கள், வீடியோ ஆடி யோ பதிவுகள் முதலிய ஆவணங்கள். நான் திரைத்துறையில் இந்தக் கதையைப் பல காலகட்டங்களில் முன்னணி நடிகர்கள், என்னுடன் பணியாற்றிய நண்பர்களிடம் சொன்னது பலருக்கும் இது நன்கு தெரியும். இவை அனைத்துமே 2022-க்கு முன்பே நடந்தவை. அனைத்திற்கும் அனைவரிடமிருந்தும் சாட்சிகள் உள்ளன.
ஒரு படத்தை எடுப்பது மிக மிகக் கடினம். அதை மக்களிடம் கொண்டு சேர்ப்பதும் மிக மிகக் கடினம். இதையெல்லாம் தாண்டி இது போன்ற சதி அவதூறுகளைச் சமாளிப்பது மனக்கஷ்டத்தை ஏற்படுத்துகிறது. மேற்கொண்டு இதில், தெளிவோ ஆதாரங்களோ வேண்டுமெனில் தேவையான முறையான இடத்தில் மட்டுமே சமர்பிப்பது நன்று என்று தோன்றுகிறது. மக்களும், பத்திரிகை/ ஊடக / சமூக வலைத்தள நண்பர்களும் என் தரப்பு கருத்தினை அறிந்து கொள்ளவே, இப்பதிவு. இந்தச் சர்ச்சை பதிவுகளுக்கும் சதி அவதூறுகளுக்கும் முற்று புள்ளி வைக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
இன்னொருவர் கதையை / திரைக்கதையைத் திருடி எழுத வேண்டிய இயலாமை எனக்கில்லை. தொடர்ந்து ஆதரிப்போருக்கு நன்றி. பத்திரிகை மற்றும் ஊடகங்களுக்கு நன்றி. எங்கள் படத்தை ஹாட் ஸ்டார் தளத்தில் கண்டு உங்கள் ஆதரவைக் கொடுங்கள்.” எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க: சக்தித் திருமகன் கதை திருடப்பட்டதா?
director arun prabhu shares sakthi thirumagan story accusation
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.