இன்ஸ்டாவில் ருக்மணி வசந்த் உள்பட பலரை அன்பாலோ செய்த ரிஷப் ஷெட்டி!
நடிகர் ரிஷப் ஷெட்டி இன்ஸ்டாவில் பலரை அன்பாலோ செய்துள்ளார்..
ரிஷப் ஷெட்டி கன்னட நடிகர்கள் மற்றும் பிரபலங்களை அன்பாலோ செய்திருப்பது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
கன்னட சினிமாவில் சிறுசிறு கதாபாத்திரத்திரங்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் ரிஷப் ஷெட்டி. 2012 ஆம் ஆண்டில் வெளியான துக்ளக் என்கிற கன்னட படம் மூலம் சினிமாவுக்கு அறிமுகமான ரிஷப் இதுவரை 20-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
அதில், கருட கமன விருஷப வாகன திரைப்படம் அவருக்கு நல்ல பெயரைப் பெற்றுத் தந்தது. தொடர்ந்து, காந்தாரா என்கிற படத்தை எழுதி, இயக்கி, நடித்தார். ரூ. 15 கோடியில் உருவான அப்படம் ரூ. 400 கோடிக்கும் அதிகமாக வசூலித்து இந்தியளவில் ரிஷப் ஷெட்டியைப் பிரபலப்படுத்தியது.
பின், காந்தாரா சாப்டர் - 1 படத்தால் வணிக ரீதியாகவும் ரூ. 100 கோடி சம்பளம் பெறும் கதாநாயகனாக வளர்ந்துள்ளார். தற்போது, சத்ரபதி சிவாஜி, ஜெய் ஹனுமன் உள்ளிட்ட பான் இந்திய படங்களில் நடித்தும் வருகிறார்.
இந்த நிலையில், இன்ஸ்டாகிராமில் பிரபல கன்னட நடிகர்களான ருக்மணி வசந்த், ராஜ் பி ஷெட்டி, ரக்ஷித் ஷெட்டி மற்றும் ஹொம்பாலே பிலிம்ஸ் உள்பட இதுவரை பின்தொடர்ந்து வந்த அனைவரையும் ரிஷப் அன்பாலோ செய்துள்ளார்.
தற்போது, தன் மனைவி பிரகதி, ரிஷப் ஷெட்டி பிலிம்ஸ், ரிஷப் ஷெட்டி பவுண்டேஷன் ஆகிய 3 கணக்குகளை மட்டுமே ரிஷப் பின்தொடர்வது ரசிகர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
பொதுவாக, பிரபலங்களில் சிலர் ஆரம்பத்திலிருந்தே யாரையும் பின்தொடராமல் இருப்பார்கள். ஆனால், நல்ல நட்பில் இருந்தவர்களையும் இன்ஸ்டாவிலிருந்து ரிஷப் நீக்கியுள்ளார்.