மாதவிடாய் குறித்த சர்ச்சையான கருத்துக்கு விமர்சிக்கப்படும் ஸ்ரீலீலா!
நடிகை ஸ்ரீலீலாவின் சர்ச்சையான பேச்சு குறித்து...
நடிகை ஸ்ரீ லீலா சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் மாதவிடாய் குறித்து பேசியது கடுமையான விமர்சனங்களை அவருக்கு எதிராக கிளப்பியுள்ளது.
”பெண்கள் மாதவிடாய் சமயத்தில் அதை ஒரு காரணமாகக் காட்டி ஒரு செயலை செய்யாமல் இருக்கக் கூடாது; அது வெறுமனே ஒரு மனத் தடை” எனக் கூறியிருந்தார். இது சமூக வலைதளத்தில் அவருக்கு எதிராக மாறியுள்ளது
அமெரிக்காவில் பிறந்த ஸ்ரீலீலா பெங்களூரில் வளர்ந்தவர். மருத்துவ படிப்பினைத் துவங்கியவர், நடிப்பில் அதிக ஆர்வம் இருந்தாதால் திரைத்துறைக்கு வந்தார்.
Advertisement
தொடக்கத்தில் 2019ல் கன்னட படத்தில் அறிமுகமானாலும் தெலுங்கில்தான் பிரபல நடிகையாக அறியப்படுகிறார். இவர் நடித்த பகவந்த் கேசரி, குண்டூர் காரம் ஆகிய படங்கள் வெற்றிபெற்றன. தமிழில் பராசக்தி திரைப்படத்தில் நடித்து பாராட்டுகளைப் பெற்றார். அடுத்ததாக, நடிகர் அஜித் குமாரின் 64-வது திரைப்படத்தில் நடிக்க உள்ளார்.
சமீபத்தில் ஸ்ரீலீலா தன் மருத்துவ படிப்பை நிறைவு செய்து பட்டம் பெற்றுள்ளார். அவர் 3 குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வருவதும் குறிப்பிடத்தக்கது.
உஸ்தாத் பகத் சிங் படத்தின் வெற்றிவிழாவில் பேசும்போது நடிகையும் மருத்துவ படிப்பை முடித்தவருமான ஸ்ரீ லீலா பேசியிருப்பதாவது:
மாதவிடாய் எங்களுக்குப் பிரச்னையாக இருக்கக் கூடாது. நான் மாதவிடாயின்போது பல பாடல்களுக்கு நடனமாடியுள்ளேன். அந்தப் பாடல்களும் ஹிட் அடித்துள்ளன.
ஆண்களைப் போலவே நாமும் சம உரிமை வேண்டுமென பேசுவதால், மாதவிடாயை ஒரு பிரச்னையாகப் பேசுவது சரியா? நாம் இந்த விஷயத்தில் நம்மையே இன்னும் கொஞ்சம் முன்னேற வேண்டும். இந்த மனத்தடையை நாம் ஒரு சாக்காக சொல்லக்கூடாது என்றார்.
இது குறித்து சமூக வலைதளங்களில் பலரும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்கள். எல்லாருக்குமே ஒரே மாதிரியான அனுபவங்கள் ஏற்படாது எனவும் பொதுமைப்படுத்துவது மிகவும் தவறானது எனவும் ஸ்ரீலீலா மீது விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன