பாலியல் குற்றச்சாட்டு! இயக்குநர் ரஞ்சித் ஜாமீனில் விடுவிப்பு!
சிறையில் அடைக்கப்பட்ட மலையாள இயக்குநர் ரஞ்சித் ஜாமீனில் விடுவிக்கப்பட்டது குறித்து...
பாலியல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட பிரபல மலையாள இயக்குநர் ரஞ்சித்துக்கு எர்ணாகுளம் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.
மலையாள திரையுலகின் முன்னணி இயக்குநரும், நடிகருமான ரஞ்சித் மீது ஏராளமான பாலியல் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
மலையாள திரையுலகில் நடைபெற்ற பாலியல் அத்துமீறல்கள் குறித்து விசாரணை மேற்கொண்ட ஹேமா கமிட்டியின் அறிக்கையிலும் சில நடிகைகள் இயக்குநர் ரஞ்சித்தின் பெயரைப் பதிவு செய்துள்ளனர்.
Advertisement
இதனைத் தொடர்ந்து, 2026 ஆம் ஆண்டு துவக்கத்தில் கேரவனில் இயக்குநர் ரஞ்சித் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக நடிகை ஒருவர் புகாரளித்தார். எர்ணாகுளம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து பாதிக்கப்பட்ட பெண்ணின் வாக்குமூலத்தின் அடிப்படையில் இயக்குநர் ரஞ்சித்தை கடந்த மார்ச் 31 அன்று கைது செய்தனர்.
இதையடுத்து, நீதிமன்றக் காவலில் எர்ணாகுளம் சிறையில் அடைக்கப்பட்ட இயக்குநர் ரஞ்சித் இந்தக் குற்றச்சாட்டுகள் அனைத்தையும் மறுத்துள்ளார். மேலும், அதிகாரிகளின் விசாரணைக்கு அவர் ஒத்துழைக்கவில்லை எனக் கூறப்பட்டுள்ளது.
இந்த நிலையில், எர்ணாகுளம் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை (ஏப். 10) அன்று நிபந்தனையுடன் கூடிய ஜாமீன் வழங்கியதைத் தொடர்ந்து, இயக்குநர் ரஞ்சித் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.