இனி நேர்காணல்கள் கிடையாது! முடிவு எடுத்த லோகேஷ் கனகராஜ்?
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் குறித்து...
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இனி நேர்காணல்கள் வழங்கப்போவதில்லை என முடிவெடுத்துள்ளாராம்.
தமிழ் சினிமாவில் ஒவ்வொரு பத்து ஆண்டுகளுக்கு ஒருமுறை நடிகர், இயக்குநர் என யாராவது குறுகிய காலங்களிலேயே பெரிய உச்சத்திற்கு செல்வார்கள். அப்படி, தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்குவதிலும் எதிர்பார்ப்பை எகிறச் செய்வதிலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியவர் இயக்குநர் லோகேஷ் கனகராஜ்.
மாநகரம் என்கிற நல்ல படம் அடுத்தடுத்த படங்களுக்கான கதவுகளைத் திறந்து வைத்தாலும் கைதி திரைப்படமே லோகேஷை முக்கியமான இயக்குநராக மாற்றியது. அப்படத்தின் வெற்றியால் வணிக ரீதியாக பெரிய பட்ஜெட்கள் கிடைக்க மாஸ்டர், விக்ரம் என வெற்றிப்படங்கள் கொடுத்தார்.
Advertisement
தொடர்ந்து, லியோ மூலம் இந்தியளவில் ஆக்சன் இயக்குநருக்கான பட்டியலிலும் லோகேஷ் இணைந்தார். அப்படம் கலவையான விமர்சனங்களைச் சந்தித்தாலும் தமிழில் ரூ. 50 கோடி சம்பளம் வாங்கிய முதல் இயக்குநர் என்கிற பெயருடன் கூலியை இயக்கினார்.
கூலி திரைப்படத்திற்கான நேர்காணல்களில் படம் குறித்து அதீதமான சித்திரத்தை வழங்கியதாக ரசிகர்கள் கருதினர். அதனால், இயல்பைவிட கூலி மீதும் பெரிய எதிர்பார்ப்பு விழுந்தது. ஆனால், அப்படம் விமர்சன ரீதியாக கடும் தோல்வியைச் சந்திக்க, லோகேஷ் மோசமாக விமர்சிக்கப்பட்டார்.
போலியாக எதிர்பார்ப்பை ஏற்படுத்துவதாக அவர் மீது குற்றச்சாட்டுகளும் எழுந்தன. இதனால், லோகேஷ் அதீதமாக புகழப்படும் இயக்குநர் என ரசிகர்களே கருத்துகளைப் பகிர்ந்தனர். இதன் காரணமாக, சமூக வலைதளங்களில் லோகேஷ் ஏதாவது சொன்னால் இன்று வரை கிண்டல் செய்யப்படுகிறார்.
தற்போது, அல்லு அர்ஜுனை வைத்து புதிய திரைப்படத்தை இயக்கும் பணிகளை லோகேஷ் மேற்கொண்டு வருகிற நிலையில், இவர் தயாரிப்பில் உருவான 29 படத்தின் வெளியீட்டுத் தேதிக்கான புரமோ வெளியாகியுள்ளது. அதில், இயக்குநரும் லோகேஷின் நண்பருமான ரத்னகுமார், லோகேஷிடம், “இனிமேல் நீ நேர்காணல்கள் கொடுக்கப்போவதில்லை எனச் சொல்லிவிட்டாய்” என்கிறார். இது, லோகேஷ் கனகராஜ் இனி எந்த நேர்காணல்களையும் வழங்கமாட்டார் என்பதையே குறிப்பது அவருடைய ரசிகர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.