என் தனிமை நீங்கியது : முதல் கார் வாங்கிய சின்ன திரை நடிகை!
சின்ன திரை நடிகை ஜீவிதா முதல் கார் வாங்கியது குறித்து...
வாழ்வின் முதல் காரை வாங்கியதில் இருந்து தனிமையை உணர்ந்ததே இல்லை என்றும், தனிமை நீங்கிவிட்டதாகவும் சின்ன திரை நடிகை ஜீவிதா முருகேசன் தெரிவித்துள்ளார்.
தனது ஊதியத்தில் முதல் கார் வாங்கியுள்ள ஜீவிதா, வாழ்வின் சிறந்த அனுபவங்களுக்காக காத்திருப்பதாக பதிவிட்டுள்ளார். சின்ன திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ரஞ்சனி தொடரில் நாயகியாக நடித்து மக்கள் மனங்களைக் கவர்ந்தவர் நடிகை ஜீவிதா. தொடக்கத்தில் சிங்கப்பெண்ணே தொடரில் சிறிய பாத்திரத்தில் நடித்திருந்தாலும், ரஞ்சனி தொடரின் மூலம் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியவர்.
தனது வசீகரமான தோற்றத்தாலும் நடிப்பாலும் கதைக்கு வலு சேர்த்துவந்த ஜீவிதா, சமூக வலைதளத்திலும் சுறுசுறுப்பாக இயங்கக் கூடியவர்.
படப்பிடிப்பு தளத்தில் நடக்கும் குறும்புத்தனங்களையும் கொண்டாட்டங்களையும் ரசிகர்களுடன் பகிர்வதில் ஆர்வமுடையவர் ஜீவிதா. விளம்பரங்களிலும் அடுத்தடுத்து நடித்து வருகிறார்.
தற்போது இரு மலர்கள் என்ற தொடரில் நாயகியாக நடித்து வருகிறார். இவருடன் 'இதயத்தை திருடாதே' தொடரில் நடித்து பிரபலமான நடிகை ஹிமா நடிக்கிறார்.
இந்நிலையில், ஜீவிதா தனது முதல் காரை வாங்கியுள்ளார்.
இதனை ரசிகர்களுடன் நெகிழ்ச்சியுடன் ஜீவிதா பகிர்ந்துள்ளார். புதிய காருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களைப் பகிர்ந்து அவர் பதிவிட்டுள்ளதாவது,
''எனது புதிய கார், முதல் காரை வாங்கி ஒரு மாதம் ஆகிறது. கார் வந்ததிலிருந்து தனிமையில் இருப்பதை நான் உணர்ந்ததே இல்லை. காருக்கான சாவியை என் கைகளில் வாங்கியதில் இருந்த பரவசம் என்னுள் அப்படியே தங்கிவிட்டது. எங்கள் இருவருக்குமான பயணம் மிக நீண்டது என்பதை நான் அறிவேன். சிறந்த அனுபவங்களுக்காக காத்திருக்கிறேன்'' எனப் பதிவிட்டுள்ளார்.
தனது உழைப்பின் மூலம் முதல் காரை வாங்கியுள்ள நடிகை ஜீவிதாவுக்கு ரசிகர்கள் பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.