கல்வியில் அடைய முடியாததை நடிப்பில் அடைந்தேன் : நடிகை ரேஷ்மா!
கல்வியில் அடைய முடியாததை நடிப்பில் அடைந்துள்ளதாக நடிகை ரேஷ்மா முரளிதரன் நெகிழ்ச்சி...
கல்வியில் அடைய முடியாததை நடிப்பில் அடைந்தேன் என்று நடிகை ரேஷ்மா முரளிதரன் தெரிவித்துள்ளார்.
கல்வி பயிலும்போது மாநில அரசின் விருதை வாங்குவேன் என தந்தை எதிர்பார்த்ததாகவும், ஆனால் அப்போது நிறைவேற்ற முடியாததை, எனது நடிப்பின் மூலம் நிறைவேற்றியுள்ளதாகவும் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.
2014 முதல் 2022 வரை 9 ஆண்டுகளுக்கான சின்ன திரை விருதுகள், 2015-2022 வரை 6 கல்வியாண்டுகளுக்கான தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆா். திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவனத்தின் மாணவா் விருதுகள், கடந்த 13 ஆம் தேதி வழங்கப்பட்டன.
Advertisement
Advertisement
2017 - 2021 வரை ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பூவே பூச்சூடவா தொடரில் நடித்ததற்காக நடிகை ரேஷ்மா முரளிதரனுக்கு விருது வழங்கப்பட்டது. தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ. சாமிநாதன் விருது வழங்கினார்.
விருது பெற்ற மகிழ்ச்சியில் மாநில அரசு விருது பெறும் தனது கனவு குறித்து ரேஷ்மா முரளிதரன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அமைச்சரிடம் மாநில அரசு விருது பெறும் புகைப்படத்தைப் பகிர்ந்து ரேஷ்மா பதிவிட்டுள்ளதாவது:
''நான் பள்ளிக்கூடம் படிக்கும்போது உனது கல்விக்காக ஒருநாள் மாநில அரசின் விருது பெறுவாய் என என் தந்தை அடிக்கடி கூறுவார். ஆனால், என்னால் அவருக்கு அதைக் கொடுக்க முடியவில்லை.
ஆனால், இன்று என்னுடைய முதல் தொடருக்காக மாநில அரசின் விருதைப் பெற்றுள்ளேன். அப்பா.... உங்களை நான் பெருமைப்படுத்தியதாக நம்புகிறேன்.
இந்தப் பெருமைக்காக தமிழ்நாடு அரசுக்கும் நடுவர் குழுவுக்கும் என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். என்னுடைய குழு, சக நடிகர்கள், என் நண்பர்கள், குடும்பம் மற்றும் ரசிகர்கள் அனைவருக்கும் இந்த விருது சமர்ப்பணம்.
என் வாழ்நாள் பயணத்தில் எதிர்பாராத இந்த நிகழ்வை நிகழ்த்தியதற்காக பிரபஞ்சத்திற்கும் நன்றி'' எனப் பதிவிட்டுள்ளார்.
மாநில அரசு விருது பெற்றுள்ள நடிகை ரேஷ்மா தற்போது சன் தொலைக்காட்சியில் செல்லமே செல்லமே தொடரில் நாயகியாக நடித்து வருகிறார்.
2017 ஆம் ஆண்டு பூவே பூச்சூடவாவில் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, அபி டெய்லர், நெஞ்சத்தை கிள்ளாதே, கிழக்கு வாசல் உள்ளிட்டத் தொடர்களில் நாயகியாக ரேஷ்மா நடித்துள்ளார்.