பாக்யராஜ் உடல் தகனத்திற்கு முன் பூர்ணிமா சொன்ன விஷயம்... கண்கலங்கிய பார்த்திபன்!
இயக்குநர் பாக்யராஜ் தகனம் குறித்து பார்த்திபன் பேசியுள்ளார்...
மறைந்த இயக்குநர் பாக்யராஜின் உடல் தகனத்தின் போது அவரது மனைவி பூர்ணிமா சொன்ன விஷயத்தை உருக்கமாகக் கூறியுள்ளார் பார்த்திபன்.
நடிகரும் இயக்குநருமான பார்த்திபன் மறைந்த இயக்குநர் பாக்யராஜிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர். தாவணிக் கனவுகள் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்திலும் நடித்திருப்பார். தொடர்ந்து, பாக்யராஜின் படங்களுக்கு உதவியாளராகப் பணியாற்றி, 1989 ஆம் ஆண்டு புதிய பாதை திரைப்படம் மூலம் இயக்குநரானார்.
பாக்யராஜின் மறைவின் போது பார்த்திபன் அனைத்து ஏற்பாடுகளையும் அருகே இருந்து கவனித்துக்கொண்டார். தற்போது பாக்யராஜ் குறித்த நினைவுகளை நேர்காணல்களில் பகிர்ந்து வருகிறார்.
Advertisement
Advertisement
அப்படியொரு நேர்காணலில் பேசிய பார்த்திபன், “இயக்குநர் பாக்யராஜ் அவரின் உதவி இயக்குநராக என்னைச் சேர்த்துக்கொண்டால், மொட்டை அடிப்பேன் என வேண்டிக்கொண்டேன். அதே போல், உதவியாளரானதும் மொட்டையடித்தேன். இதனை அறிந்த பாக்யராஜ் என்னைத் திட்டினார். அவரின் தயாரிப்பிலேயே என்னை இயக்குநராக அறிமுகப்படுத்து திட்டமிட்ட போது, எப்படி என்னை அறிமுகப்படுத்தலாம் என யோசித்துக்கொண்டிருந்தார்.
பின், அவரே எழுதிக்காட்டினார். “பாரதிராஜாவிடமிருந்து ஒரு பாக்யராஜ் வந்தது போல்... பாக்யராஜிடமிருந்து ஒரு பார்த்திபன் வருகிறார்... “ இதைப் படித்த பிற உதவியாளர்கள் இது அதீதமாக இருக்கிறது. ஒருவேளை பார்த்திபன் வெல்லவில்லை என்றால் என்ன ஆவது? என்றனர். ஆனால், பாக்யராஜ் உறுதியாக ‘பார்த்திபன் வெல்வார்’ எனச் சொன்னார். என்மீது அவ்வளவு நம்பிக்கை வைத்தவர்.
அவரின் மறைவுச் செய்தியைக் கேட்டதும் மிகவும் எமோஷனல் ஆகிவிட்டேன். அஞ்சலி செலுத்தச் சென்றபோது அவரது உடலைப் பார்த்ததும் கண்ணீரைக் கட்டுப்படுத்த முடியவில்லை. மாலைக்குப் பதிலாக 9 அடியில் பேனா, எழுத்து அட்டையை அந்த இரவில் தயார் செய்து வைத்தேன். இறுதியில் அது அவரின் உடலுடன் மின்தகனத்திற்குள் சென்றது. தகனத்திற்கு முன் இயக்குநரின் மனைவி பூர்ணிமா என்னிடம், ‘அவரின் கண்ணாடியைக் கழட்டிவிடலாமா? உள்ளே நெருப்பில் அது உருகி முகத்தில் காயத்தை ஏற்படுத்திவிடும்’ என்றார். அதைக் கேட்டதும் கண்ணீரைக் கட்டுப்படுத்த முயன்றேன். பின், வேண்டாம் அது அவருடனே செல்லட்டும் என்றேன். நமக்கு ஒருவருக்கு மீதிருக்கும் பெரிய அன்பின் வெளிப்பாடு அது ” எனத் தெரிவித்துள்ளார்.
Parthiban has movingly recounted what Poornima said during the cremation of the late director Bhagyaraj.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.