இறப்பு குறித்து என்ன சொல்லியிருந்தார் பாரதிராஜா?
இறப்பு குறித்து பயமாக இருப்பதாக இயக்குநர் பாரதிராஜா கூறியது குறித்து..
இயக்குநர் இமயம் பாரதிராஜா, இன்று உடல்நலக் குறைவால் காலமானார். அவரது இறுதிச் சடங்குகள் தேனியில் நாளை மாலை நடைபெறவிருக்கிறது.
84 வயதாகும் பாரதிராஜா, வயோதிகம் தொடர்பான உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று இயற்கை எய்தினார்.
சில ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு நேர்காணலில் இந்த வாழ்வில் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று நினைக்கிறீர்கள் என்று பாரதிராஜாவிடம் கேட்டதற்கு, அதை சொல்வதற்கு பயமாக இருக்கிறது என்று பதிலைத் தொடங்குகிறார்.
Advertisement
Advertisement
இந்த உலகில் பூக்கள் அழகு, பெண்கள் அழகு, மேகம் அழகு, மலை அழகு, நீர்வீழ்ச்சி அழகு அனைத்தும் அழகு. இதையெல்லாம் விட்டுவிட்டு போய்விடுவோமோ என்று பயமாக இருக்கிறது.
உடம்பு போய்விடும். நான் நெனச்சது.. இதை நினைக்கும்போது பயமா இருக்கிறது.
இந்த உலகை நான் காதலிக்கிறேன், என்னை நான் காதலிக்கிறேன், இது போய்விடக் கூடாது என்று நினைக்கிறேன்.
பலரும் சொல்கிறார்கள், ஏழேழு ஜென்மம் இருக்கிறது என்கிறார்கள், புல்லாகப் பிறப்போம், பூண்டாகப் பிறப்போம். அதையெல்லாம் நம்பவில்லை. இந்த உலகை எவ்வளவு அழகாக ரசிக்க முடியுமோ அந்த அளவுக்கு நான் ரசித்துவிட்டேன் என்று தன்னுடைய மனதில் இருப்பதை அப்படியே வெளிப்படையாகப் பேசியிருந்தார்.
எத்தனையோ ஏற்றத் தாழ்வுகள், வெற்றி தோல்வி, சாதனைகளைப் படைத்த பாரதிராஜா, இன்று காலமானார். இறுதி நாள்களில் உடல் நலக் குறைவை விடவும், அவரது மகனின் இழப்புதான் அதிகம் வாட்டியது. அந்த மன வருத்தத்துடனே அவர் இன்று மறைந்தார்.