தந்தையான மகிழ்ச்சியில் ஹரிஷ் கல்யாண்!
ஹரிஷ் கல்யாண் - நர்மதா தம்பதியினருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.
தனக்கு பெண் குழந்தை பிறந்துள்ளதாக நடிகர் ஹரிஷ் கல்யாண் தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
தமிழில் ‘சிந்து சமவெளி’ திரைப்படம் மூலம் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகர் ஹரிஷ் கல்யாண். இவர் ’பிக்பாஸ்’ நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டு மக்களின் ஆதரவைப் பெற்றார்.
அதற்குப் பின் அவர் நடிப்பில் வெளியான ‘பியார் பிரேம காதல்’ 'இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்’ ‘ஓ மணப்பெண்ணே’ ‘தாராளபிரபு’ உள்ளிட்ட படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று, இவரை நாயகனாக மாற்றியது.
Advertisement
ஹரிஷ் கல்யாண் நடிப்பில் கடைசியாக வெளியான டீசல் திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. தற்போது இவர் வினீத் வரபிரசாத் இயக்கும் தாஷமக்கான் படத்தில் நடித்து வருகிறார்.
ஹரிஷ் கல்யாண் கடந்த 2022 ஆம் ஆண்டு நர்மதாவை திருமணம் செய்து கொண்ட நிலையில், அவர் தந்தையான மகிழ்ச்சியை சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக நடிகர் ஹரிஷ் கல்யாண் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:
”நானும் என் மனைவி நர்மதாவும் இன்று (மார்ச் 2) எங்கள் பெண் குழந்தையை வரவேற்றுள்ளோம் என்ற நல்ல செய்தியைப் பகிர்ந்து கொள்ளும்போது என் இதயம் மகிழ்ச்சியால் நிறைந்துள்ளது. தாயும் மகளும் ஆரோக்கியமாகவும் நலமாகவும் உள்ளனர்.
இந்த அழகான புதிய அத்தியாயத்தை நாங்கள் ஒன்றாகத் தொடங்கும் இந்தத் தருணத்தில் எங்கள் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் நலம் விரும்பிகளின் அன்பு மற்றும் ஆசீர்வாதங்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.