நானும் பா. இரஞ்சித்தும் பரம்பரை எதிரிகளா? வைரலாகும் மோகன். ஜி பதிவு!
மோகன். ஜியின் பதிவு குறித்து...
இயக்குநர் மோகன். ஜியின் பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
முன்னாள் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவரான ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்குப் பின் அவரது மனைவி பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் அரசியலில் தீவிரமாக இயங்கி வருகிறார்.
தற்போது, சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு தன்னை அதிமுக கூட்டணியில் இணைத்துக்கொண்டு திரு. வி. க நகர் தொகுதியில் போட்டியிடுகிறார். தலித் அரசியலை முன்னெடுக்கக் கூடியவர் என்பதால் பல சிறுபான்மை அரசியல் ஆதரவாளர்கள் பொற்கொடிக்கு ஆதரவு தெரிவிக்கின்றனர்.
முக்கியமாக, இயக்குநரும் நீலம் பண்பாட்டு மையத்தின் நிறுவனருமான பா. இரஞ்சித் தன் ஆதரவைத் தெரிவித்ததுடன் அவரை வெற்றிபெறச் செய்ய வேண்டுமென கூறியுள்ளார்.
அதேநேரம், அதிமுக உடன் பாஜகவும் இருப்பதால் பா. இரஞ்சித்தும் இந்த அரசியல் சமரசங்களில் இணைந்துவிட்டார் என பலரும் விமர்சித்து வருகின்றனர்.
குறிப்பாக, ரஞ்சித்துக்கு எதிரான அரசியல் நிலைப்பாடு கொண்டவரான இயக்குநர் மோகன். ஜியும் பொற்கொடியை ஆதரித்திருப்பதால், இருவரும் ஒன்றிணைந்து விட்டனர் என சமூக வலைதளங்களில் சிலர் தாக்கி எழுதி வருகின்றனர்.
இந்த நிலையில், இதனைக் கண்ட மோகன். ஜி, “காலம் காலமா நீங்க கட்டமைத்த பிம்பம் அது.. நாங்க ரெண்டு பேரும் என்ன பரம்பரை எதிரியா.. சிந்தனை ஒரே இடத்தில் சேரும் போது, இருவரும் ஒருவரை ஆதரிப்பது என்ன தப்பு.. அந்த அம்மையார் வெல்லட்டும் .. உங்களை வெல்வதே எங்கள் நோக்கம்." எனத் தெரிவித்துள்ளார். இவரின் கருத்து சமூக வலைதளங்களில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.