FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கட்டுரைகள்

கொள்ளை போகும் மணல் வளம்

கட்டுமானத் தொழிலுக்கு முக்கியத் தேவை மணல்தான். ஆனால் அதன் அருமை தெரியாமல் தமிழகம் முழுவதும் ஆறுகளில் இருந்து மணல் வளம் நாள்தோறும் கொள்ளையடிக்கப்படுகிறது.

Updated On : 26 ஜூலை 2014, 1:42 am IST
பகிர்:

கட்டுமானத் தொழிலுக்கு முக்கியத் தேவை மணல்தான். ஆனால் அதன் அருமை தெரியாமல் தமிழகம் முழுவதும் ஆறுகளில் இருந்து மணல் வளம் நாள்தோறும் கொள்ளையடிக்கப்படுகிறது.

மணல் கொள்ளை போவதால், நமது வாரிசுகள் நீருக்காகத் தவிக்க நேரிடும். இதைப் பற்றி யாரும் கவலைப்படுவதாகத் தெரியவில்லை.

இன்றைய தேவை நிறைவேறினால் போதும் என்ற போக்கில் அரசு நிர்வாகம் உள்பட எல்லோருடைய செயல்பாடும் இருப்பது ஆபத்தானது.

Advertisement

Advertisement

சட்டப்பேரவையில் வேட்டி விஷயத்துக்கு வரிந்துகட்டிக் கொண்டு குரல் கொடுத்தவர்கள், மணல் கொள்ளையர்கள் லாரி, லாரியாக கொள்ளையடித்து அண்டை மாநிலங்களுக்கு அனுப்பி நம் பொக்கிஷத்தை கரைப்பதைப் பற்றி கவலைப்படவில்லையே!

சென்னை, பெங்களூரு ஆகிய இரு மாநகரங்களில் கட்டப்படும் அனைத்து கட்டடங்களும் பாலாற்று மணலில் எழுந்தவைதான் என்பது பலருக்குத் தெரியாது. இரு பெரும் நகரங்களின் கட்டமைப்புக்காகத் தொடர்ந்து பாலாற்று மணல் சுரண்டப்பட்டு வருகிறது.

பாலாற்றில் எல்லைமீறி மணல் சுரண்டப்படுவதால், வேலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களின் நிலத்தடி நீராதாரம் அபாயக மான நிலையை எட்டத் தொடங்கியதுள்ளது என்பதை மத்திய நிலத்தடி நீர் ஆணையம் ஆய்வு செய்து ஒன்றியம் வாரியாக பட்டியலிட்டு மாநில அரசு நிர்வாகத்தை எச்சரித்துள்ளது.

இன்றைய விஞ்ஞானத்தால் இயற்கையாகக் கிடைக்கும் மணலை செயற்கையாக உருவாக்க முடியாது. ஒரு கனஅடி மணல் உருவாக 100 ஆண்டுகள் ஆவதாக கணக்கிட்டுள்ள பொறியாளர்கள், இந்த மணல் வளம் குன்றுவதன் காரணமாகவே பல மாவட்டங்களில் நிலத்தடி நீராதாரம் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது என்பதையும் குறிப்பிடுகிறார்கள்.

ஆற்றுப்படுகைகளில் உள்ள மணல் வளம்தான் மழைக் காலத்தில் ஆங்காங்கே பெய்யும் மழை ஆற்றை அடைந்ததும், நிலத்தடி பகுதிக்கு கொண்டு சென்று சேமிக்க உதவுகிறது என்பதை நாம் ஏனோ மறந்துவிட்டோம்.

மணல் எடுக்க அனுமதி இல்லாத இடங்களில் மாட்டு வண்டிகள் மூலம் மணல் கடத்துவதும், இதற்கு பல இடங்களில் தடை விதிக்கப்பட்டாலும், வருவாய்த்துறை, காவல் துறையில் உள்ள கருப்பு ஆடுகளுக்கு கொடுக்க வேண்டியதை கொடுத்து பல நூறு மாட்டு வண்டிக்காரர்கள் பிழைப்பு நடத்துவதையும் யாரும் மறுக்க முடியாது.

அரசு ஒரு யூனிட் மணலுக்கு நிர்ணயிக்கும் விலை ரூ.315. மூன்று யூனிட் மணலுக்கான விலை ரூ.915. ஆனால் லாரிகள் நூற்றுக்கணக்கில் மணல் குவாரிகளில் 3 நாள் கூட வரிசையில் காத்திருந்து மணல் எடுத்துச் செல்லும் அளவுக்கு இத்தொழிலில் ஒருசிலர் பல மடங்கு லாபம் ஈட்டுகின்றனர்.

சென்னை, பெங்களூரு உள்ளிட்ட மாநகரங்களுக்கு 3 யூனிட் மணல் ரூ.15 ஆயிரம் வரை விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. இதில் அரசுக்கு சொற்ப வருவாயும், இடைத் தரகர்களுக்கு கோடிக்கணக்கிலும் வருவாயும் கிடைப்பது ஊரறிந்த ரகசியம்.

அதிகபட்சம் மூன்று அடி ஆழத்துக்கு மட்டுமே மணல் எடுக்கலாம். இயந்திரங்களைப் பயன்படுத்தக் கூடாது. காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே மணல் அள்ள வேண்டும்.

கரையில் இருந்து 60 அடி தள்ளியே அள்ள வேண்டும். குடிநீர் கிணறு இருக்கும் இடங்களில் ஒரு கிலோ மீட்டர் தொலைவுக்கு அப்பால்தான் அள்ள வேண்டும்.

தரைப்பாலம், மேம்பாலம் இருக்கும் இடங்களில் 100 அடி தூரத்துக்கு மணல் அள்ளக் கூடாது போன்ற அரசின் விதிமுறைகள் எதுவும் மணல் அள்ளப்படுவதில் பின்பற்றப்படுவதில்லை என்பதும் வேதனைக்குரிய விஷயம்.

ஆற்றுப் படுகைகளில் அதிக அளவில் மணல் எடுப்பதால் நில அதிர்வுகள், இயற்கை சீற்றத்துக்கு ஆளாக நேரிடும் என்பது சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் பலரின் ஆதாரப்பூர்வமான தகவல்களை நாம் கவனத்துடன் உற்று பார்க்க வேண்டியுள்ளது.

கடுமையான சுற்றுச்சூழல் பாதிப்பு, குடிநீர் பற்றாக்குறை, வேளாண்மை பாதிப்பு போன்றவற்றை தவிர்க்க இனியாவது அரசும் நிர்வாகமும் விழித்துக் கொள்ள வேண்டும்.

அரசு நிர்வாகம் மணலை விதிமுறை மீறி அள்ளுவதை தடுத்து நிறுத்தியாக வேண்டும்.

எல்லா விஷயத்திலும் மேலை நாடுகளை பின்பற்றும் நாம், கட்டுமானத் தொழிலிலும் மணலை குறைவாக பயன்படுத்தி உறுதியான கட்டடங்களை உருவாக்கும் மேலை நாட்டு நவீன கட்டுமானத் தொழில்நுட்பத்தை கட்டட வல்லுநர்கள் பின்பற்ற ஊக்குவிக்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments