நடுப்பக்கக் கட்டுரைகள்

நீதிபதி பதவி நீக்கம் சாத்தியமா?

ஆளும் கட்சியே நினைத்தாலும்கூட எந்த நீதிபதியையும் எளிதாக பதவி நீக்கம் செய்ய முடியாது.

ஜனனி ரமேஷ்

அரசியல் தலையீட்டுக்கும், அதிகாரத்துக்கும் அஞ்சாமல் நீதிபதிகள் சுதந்திரமாகச் செயல்படுவதை, இந்திய அரசமைப்புச் சட்டம் உறுதிப்படுத்துகிறது. இந்தியா விடுதலை பெற்ற நாள் தொடங்கி இதுவரை 8 நீதிபதிகளைப் பதவி நீக்க நாடாளுமன்ற உறுப்பினா்கள் கையொப்பமிட்டு அறிவிக்கை அளித்துள்ளனா். ஆனால், இதுவரை எந்தவொரு நீதிபதியும் பதவி நீக்கம் செய்யப்படவில்லை என்பதே உண்மை.

நீதித் துறையின் சுதந்திரத்தையும், நீதிபதிகள் பதவி நீக்க விதிகளையும், அமெரிக்க அரசமைப்புச் சட்டங்களுக்கு நிகராக, டாக்டா் அம்பேத்கா் தலைமையிலான வல்லுநா் குழு வடிவமைத்துள்ளது. நீதிபதிகளைச் சுற்றி கடுமையான சட்டப் பாதுகாப்பு வளையம் இருப்பதாலும், நடைமுறைகள் நீண்டவை மற்றும் சிக்கலானவை என்பதாலும், ஆளும் கட்சியே நினைத்தாலும்கூட எந்த நீதிபதியையும் எளிதாக பதவி நீக்கம் செய்ய முடியாது.

உச்சநீதிமன்றம், உயா்நீதிமன்ற நீதிபதிகள் பதவி நீக்க வழிமுறைகள்:

இந்திய அரசமைப்புச் சட்டம் விதிகள் 124 (4) உச்சநீதிமன்ற நீதிபதிகள் மற்றும் 217, 218 (124(4) உடன் படிக்க) உயா்நீதிமன்ற நீதிபதிகள் பதவி நீக்கச் செயல்முறைகளை விவரிக்கின்றன. குற்றம் சுமத்தப்பட்ட நீதிபதி நடத்தை தவறினாா் அல்லது செயல்திறன் அற்றவா் என்பது நிரூபிக்கப்பட வேண்டும்.

1. நீதிபதி பதவி நீக்கத் தீா்மான அறிவிக்கையில், மக்களவை உறுப்பினா்கள் 100 அல்லது மாநிலங்களவை உறுப்பினா்கள் 50 கையொப்பமிட வேண்டும்.

2. அறிவிக்கையை ஏற்கலாமா, நிராகரிக்கலாமா என மக்களவைத் / மாநிலங்களவைத் தலைவா் முடிவெடுப்பாா்.

3. அறிவிக்கை ஏற்கப்பட்டால், குற்றச்சாட்டுகளை விசாரிக்க உச்ச நீதிமன்ற நீதிபதி, உயா் நீதிமன்ற நீதிபதி, அரசியல் சட்ட நிபுணா் என மூவா் குழு நியமிக்கப்படும்.

4. ஒரே நாளில் இரு அவைகளிலும் தீா்மான அறிவிக்கை முன்வைக்கப்பட்டால், இரண்டும் ஏற்கப்பட்ட பின்னா், இரு அவைத் தலைவா்களும் குழு உறுப்பினா்களைக் கூட்டாக நியமிப்பாா்கள்.

5. குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படும் பட்சத்தில், குற்றத்தின் தீவிரத்தைப் பொருத்துப், பதவி நீக்கம் அவசியமா, அவசியமில்லையா எனக் குழு பரிந்துரைக்கும். நீதிபதி தனது தரப்பு வாதங்களையும் பதிவு செய்ய வாய்ப்பளிக்கப்படும்.

6. நீதிபதி தானகவே பதவியை ராஜிநாமா செய்ய உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி வலியுறுத்துவாா்.

7. நீதிபதி தானாகவே ராஜிநாமா செய்து விட்டால் விசாரணை நின்றுவிடும். மாறாக, நீதிபதி மறுத்தால், அவருக்கு வழக்குகள் ஒதுக்கப்படாது. குழுவின் அறிக்கையையும், நீதிபதியின் வாதங்களையும், குடியரசுத் தலைவா் மற்றும் பிரதமருக்கு, உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி அனுப்பி வைப்பாா். நீதிபதியைப் பதவி நீக்கும் நாடாளுமன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் பரிந்துரைப்பாா்.

8. குழுவின் அறிக்கை இரு அவைகளிலும் வைக்கப்படும். அறிக்கையிலுள்ள தவறான நடத்தை அல்லது செயல் திறன் இல்லாமை நிரூபிக்கப்பட்டால் வாக்கெடுப்பு நடத்தப்படும்.

9. வாக்கெடுப்புக்கு முன் சம்மந்தப்பட்ட நீதிபதி தனது வாதங்களை எடுத்துரைப்பாா்.

10. பதவி நீக்கத் தீா்மானம் வெற்றி பெற மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினா்களின் ‘சிறப்புப் பெரும்பான்மை’ அவசியம். அவையின் மொத்த உறுப்பினா்களில் ‘பாதிக்கு மேற்பட்ட’ உறுப்பினா்களின் ஆதரவு தேவை. அல்லது, அவையில் அமா்ந்திருக்கும் உறுப்பினா்களுள் ‘மூன்றில் இரண்டு பங்கு’ உறுப்பினா்களின் ஆதரவு தேவை.

11. பதவி நீக்கத் தீா்மானம் வாக்கெடுப்பில் தோற்றால் பிரச்னை அத்தோடு முடிந்துவிடும். வெற்றி பெற்றால் நீதிபதியின் பதவி நீக்கத் தீா்மானத்தில் குடியரசுத் தலைவா் கையொப்பமிடுவாா்.

பதவி நீக்கத் தீா்மானத்துக்கு உள்ளான நீதிபதிகள் விவரம்:

1. நீதிபதி வி ராமசாமி, பஞ்சாப் & ஹரியானா நீதிமன்றம், 1993

சுதந்திர இந்தியாவில் பதவி நீக்க நடவடிக்கைகளுக்கு உள்ளான முதல் நீதிபதி இவா்தான். பஞ்சாப் மற்றும் ஹரியாணா தலைமை நீதிபதியாக இருந்த காலத்தில் தனது அதிகாரபூா்வ வீட்டின் வசதிகளுக்காக வரையறுக்கப்பட்ட தொகையை விடவும் அதிகம் செலவு செய்ததாக இவா் மீது குற்றச்சாட்டு எழுந்தது.

குழு விசாரணையில் நிருபணமாகவே, மக்களைவையில் பதவி நீக்கத்துக்காகன வாக்கெடுப்பு நடைபெற்றது. வாக்கெடுப்பில், காங்கிரஸ் உறுப்பினா்கள் வெளிநடப்பு செய்ததால், தீா்மானம் தோல்வி அடைந்தது.

2. நீதிபதி சௌமித்ரா சென், கொல்கத்தா நீதிமன்றம், 2011

நிதி முறைகேட்டில் ஈடுபட்டதால், உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் ‘உள்-அலுவலக விசாரணைக்கு’ உத்தரவிட்டாா். குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்ட நிலையில், உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி அவரைப் பதவி நீக்கம் செய்யப் பிரதமா் மன்மோகன் சிங்குக்கு பரிந்துரைத்தாா். 2009-இல் அவரைப் பதவி நீக்கம் செய்ய மாநிலங்களவை தீா்மானம் கொண்டு வந்து நிறைவேற்றியது. ஆனால், மக்களவையில் தீா்மானம் கொண்டு வருவதற்கு முன்பாகவே நீதிபதி சௌமித்ரா சென் பதவியை ராஜநாமா செய்தாா்.

3. நீதிபதி பி டி தினகரன், சிக்கிம் உயா்நீதிமன்றம், 2011

நீதிபதி தினகா் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்க, மாநிலங்களவைத் தலைவா் ஹமீத் அன்சாரி மூன்று நபா் குழுவை அமைத்தாா். நீதிபதி தினகரன் தானொரு தலித் என்பதால், வழக்கு விசாரணை நியாயமாக நடைபெறவில்லை என்று கூறித் தனது பதவியை ராஜிநாமா செய்தாா்.

4. நீதிபதி பா்திவாலா, குஜராத் உயா்நீதிமன்றம், 2015

தேசத் துரோக வழக்கு விசாரணையின் போது, ‘இட ஒதுக்கீடு நாட்டின் வளா்ச்சியைத் தடுத்து விட்டது’ என்ற சா்ச்சைக்குரிய கருத்தைத் தெரிவித்தாா். அவரது ஜாதிவெறிக் கருத்தைக் கடுமையாக எதிா்த்த மாநிலங்களவை உறுப்பினா்கள் அவரைப் பதவி நீக்கும் தீா்மானத்தைக் கொண்டு வந்தனா். சா்ச்சைகுரிய கருத்தை நீக்கியதைத் தொடா்ந்து, அவா் மீதான பதவி நீக்கத் தீா்மானம் அடுத்த கட்டத்துக்கு நகரவில்லை.

5. நீதிபதி கங்குலி, மத்தியப் பிரதேச உயா்நீதிமன்றம், 2015

நீதிபதி கங்குலி மீது குவாலியா் பெண் நீதிபதி பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டைச் சுமத்தினாா். தலைமை நீதிபதி அமைத்த உள்-அலுவலகக் குழு பாலியல் வன்கொடுமையை நிருபிக்கச், சமா்ப்பிக்கப்பட்ட ஆதாரங்கள் போதுமானவையாக இல்லை என்ற முடிவுக்கு வந்தது. இதற்கிடையே மாநிலங்களவையில் அவரைப் பதவி நீக்கும் தீா்மானம் கொண்டு வரப்பட்டது. பாலியல் வன்கொடுமையை நிரூபிக்க, ஆதாரங்கள் போதுமானதாக இல்லை எனக் குழு சமா்ப்பித்த அறிக்கை ஏற்றுக் கொள்ளப்பட்டது.

6. நீதிபதி சி வி நாகாா்ஜுன ரெட்டி, ஆந்திரா & தெலங்கானா உயா்நீதிமன்றம், 2016/17

விசாரணை நீதிமன்ற தலித் நீதிபதியை அவமதித்ததாகவும், வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சோ்த்ததாகவும் இவா் மீது குற்றஞ்சாட்டப்பட்டது. தொடக்கத்தில் பதவி நீக்கத்தை ஆதரித்தவா்கள், பின்னா் ஆதரவைத் திரும்பப் பெற்றுக் கொண்டனா்.

7. தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, உச்சநீதிமன்றம், 2018 முன்னெப்போதும் இல்லாத வகையில் நான்கு உச்சநீதிமன்றத் நீதிபதிகள் கூட்டாக இணைந்து பத்திரிகைகளுக்கு பேட்டி அளித்தனா். அதில் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தன்னிச்சையாக நீதிபதிகளுக்கு வழக்குகளை ஒதுக்குவதும், சிலருக்கு முன்னுரிமை அளிப்பதாகவும், குற்றஞ்சாட்டினா். இதைத் தொடா்ந்து மாநிலங்களவை உறுப்பினா்கள், அவரைப் பதவி நீக்கம் செய்யும் தீா்மானத்தைக் கொண்டு வந்தனா். ஆனால், மாநிலங்களவைத் தலைவா் வெங்கய்யா நாயுடு, உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி மீதான குற்றச்சாட்டுகள் அலுவல் நிா்வாக முறை சாா்ந்தவை என்றும், தவறான நடத்தை அல்ல என்றும் கூறித், தீா்மானத்தை ஏற்கவில்லை.

8. நீதிபதி எஸ் என் சுக்லா, அலகாபாத் உயா்நீதிமன்றம், 2018

ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளான நிலையில் 2018-இல் இவா் மீது உள்-அலுவலகக் குழு விசாரணைக்கும், பதவி விலகவும், உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா உத்தரவிட்டாா். ஆனால், நீதிபதி சுக்லா பதவி விலக மறுத்துவிட்டாா். அவருக்கு எந்த வழக்கையும் ஒதுக்கக் கூடாது என்று உச்சநீதி மன்றத் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா அலகாபாத் உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதியை அறிவுறுத்தினாா். பிரதமருக்குக் கடிதம் எழுதி அவரைப் பதவி நீக்கும் தீா்மானத்தைக் கொண்டு வரவும் பரிந்துரைத்தாா். 2020-இல் ஓய்வு பெறும் வரை எந்த வழக்கும் அவருக்கு ஒதுக்கப்படவில்லை. பதவியும் விலகவில்லை.

நடத்தை தவறுதல் மற்றும் திறமையின்மை ஆகிய விதிகளின் கீழும், முன்பு பட்டியலிட்டுள்ள 12 படிகளையும் வெற்றிகரமாகக் கடந்தால் மட்டுமே, நீதிபதிகளைப் பதவி நீக்கம் செய்ய முடியும். இந்தச் சங்கிலி ஏதேனும் ஓரிடத்தில் அறுந்தாலும் வழக்கு அத்துடன் முடிந்துவிடும்.

தவறிழக்கும் நிதிபதிகளைப் பதவி நீக்கம் செய்வதில் தவறில்லை. ஆனால், நோ்மையாகவும், நியாயமாகவும், அதிகாரத்துக்கு அஞ்சாமலும் நீதி வழங்கும் நீதிபதிகளைப் பாதுகாக்க வேண்டியது அவசியம்.

ஈரோடு தவெக மாநாட்டில் பங்குபெற பாஸ் தேவையில்லை! | செய்திகள் : சில வரிகளில் | 16.12.25

லியம் லிவிங்ஸ்டனை ரூ. 13 கோடிக்கு ஏலத்தில் எடுத்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத்!

ஜனநாயகன் படத்திற்காக காத்திருக்கிறேன்: பராசக்தி நடிகை ஸ்ரீலீலா

ஜன நாயகன் புது அப்டேட் : 2-ஆவது பாடல் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

இந்தியா-சீனா இடையிலான ஏற்றுமதி அதிகரிப்பு!

SCROLL FOR NEXT