மாற்றம் தெரிகிறது!
ஊழலுக்கு எதிரான முதல்வர் விஜய்யின் போர் வெற்றி பெற அரசு அதிகாரிகள் முழுமையாக ஒத்துழைத்து, 'ஊழலற்ற மாநிலம் தமிழ்நாடு' என்று நிலை நாட்ட வேண்டும் என்பதைப் பற்றி...
நலிந்து வரும் சமுதாயச் சூழலில் ஒரு கட்டத்தில் ஏதாவது விமோசனம் கிடைக்குமா என்ற ஏக்கம் மக்கள் மனதில் வருகிறது. கட்டுப்பாடற்ற போதைப் பொருள் புழக்கம், சரிந்து வரும் சட்டம் -ஒழுங்கு, பாலியல் வன்கொடுமைகள் என்று கணக்கிலடங்கா சீர்கேடுகளை மக்கள் சகித்துக்கொண்டு அமைதி காத்து சரியான நேரத்தில் அதற்கு விடை கண்டறிந்தனர்.
போதும் ஆட்சி செய்த கட்சிகளின் ஆதிக்கம் என்று முடிவெடுத்து, இளைய தலைமுறையின் எதிர்காலத்தைக் கருத்தில்கொண்டு நல்லதொரு தீர்ப்பை தமிழக மக்கள் வழங்கியுள்ளனர். அந்த வகையில் வரவேற்கத்தக்க புதிய மாற்றம் உதயமாகியுள்ளது.
'ஊழல்தான் உச்சகட்ட மனித உரிமை மீறல்'' என்பார் தேசிய மனித உரிமை ஆணைய முன்னாள் தலைவர் நீதியரசர் ஜே.எஸ்.வர்மா. ஊழல் தலைவிரித்தாடியது என்பது ஊரறிந்த உண்மை. மக்களும் மாற்று ஒன்று இல்லாததால் காத்துக்கொண்டிருந்தார்கள். ஆனால், ஏழை மக்கள் வாயை அடைக்க இலவசம் அள்ளி வீசப்பட்டது.
Advertisement
Advertisement
மக்கள் சரியான தருணத்தில் சுதாரித்தார்கள். இலவசம் என்பது சமுதாயத்தில் நலிந்த மக்கள் அடைய வேண்டிய உரிமை. ஆனால், அதை 'ஓசிதானே' என்று சமயம் கிடைக்கும் போதெல்லாம் இழிவுபடுத்தியது மக்கள் மனதில் பதிந்தது; நன்றாகப் பதிலடி கொடுத்தார்கள். ஆட்சிப் பொறுப்பை ஏற்றவுடன் 'போதை கலாசாரத்தை ஒழிக்க வேண்டும், பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்' என்ற வகையில் முதல்வர் ஜோசப் விஜய் போதை ஒழிப்புக்கு பிரத்யேக அமைப்பும், பெண்கள் பாதுகாப்புக்கு சிங்கப் பெண் படையும் அறிவித்து நடை முறைப்படுத்தியது பாராட்டுக்குரியது.
அதைப் பொறுப்புடன் மாநில டிஜிபி வழிநடத்த வேண்டும்.'அரசுப் பணத்தை தொடமாட்டேன், தொட விடமாட்டேன், தொட்டவரையும் விடமாட்டேன்' என்று ஊழலுக்கு எதிரான அரசின் நிலைப்பாட்டை முதல்வர் தெளிவுபட உரைத்தது ஒட்டுமொத்த மக்களின் பாராட்டைப் பெற்றுள்ளது. ஊழல் பல வகையில் நிர்வாகத்தில் பரவியுள்ளது.
சில துறைகளில் வெளிப்படையாக கூச்சமின்றி 'ரேட்' தீர்மானித்து கையூட்டு பெறுவார்கள். கமிஷன் பணத்தை எண்ண இயந்திரமும் உண்டு. சில விநாடிகளில் ஒரு கட்டை எண்ணுவதுடன் அதில் பழைய நோட்டு, செல்லாத நோட்டு இருந்தால் வெளியே தள்ளிவிடும்! பணம் வந்து குவியும்போது நிதானமாக கையிட்டு எண்ண ஏது நேரம்?
கடந்த ஆட்சியில் லஞ்சம் ஊடுருவிய முக்கியமான துறைகளில் அரசு தீர்க்கமான முடிவுகளை எடுத்துள்ளது. டாஸ்மாக் ஊழல்தான் அதிகம் பேசப்பட்டது. முதல் கட்டமாக விதிகளை மீறி அமைக்கப்பட்ட 717 கடைகள் மூடப்பட்டன. முதல் அமைச்சரவைக் கூட்டத்திலேயே டாஸ்மாக் சீரமைப்பு நடவடிக்கையில் ரூ. 1,600 கோடி கட்சி நிதி என்ற பெயரில் விற்பனையாகும் மதுவகைகளுக்கு முறைகேடாக வசூலிக்கப்பட்ட தொடர் சங்கிலி முறை அகற்றப்பட்டது. மது வகைகளின் கொள்முதல், விநியோகம், விற்பனை, தணிக்கைக்கு உட்படுத்தப்பட்டு அரசுக்கு வர வேண்டிய வரிகள்இடையில் கசியாமல் அரசு கஜானாவில் சேர வேண்டும் என்பதற்கான வழிமுறை அறிவிக்கப்பட்டது.
மது கொள்முதல், விநியோகக் கொள்கை எப்போதுமே பிரச்னைக்குரியது. இதில் நடைபெற்ற முறைகேடுதான் தில்லி ஆம் ஆத்மி அரசு கவிழ்வதற்கு காரணமானது. ஆட்சியில் உள்ள அரசியல்வாதிகளுக்கு சொந்தமான மது தயாரிப்பு ஆலைகளிலிருந்து அரசு மது கொள்முதல் செய்வது எந்த விதத்தில் நியாயம்? இது ஆதாய முரண் என்று சட்டப்பேரவையில் அமைச்சர் ஆதவ் அர்ஜூனா கேள்வி எழுப்பியது, பல ஆண்டுகளாக தொடர்ந்து வரும் இந்த முறைகேட்டுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்று எதிர்பார்க்கலாம். போக்குவரத்துப் பிரிவு தலைமைக் காவலர் ஒருவர், சொந்தமாக ஆட்டோ வைத்து பணம் ஈட்டினால், அதுவே ஆதாய முரண் என்று துறை சார்ந்த நடவடிக்கை எடுக்கப்படும் நிலையில், இந்த மதுவகை கொள்முதல் கொள்கை எவ்வளவு முரணானது?
அடுத்து மணல், தாதுப் பொருள்கள் சட்ட விரோதமாக நிர்ணயிக்கப்பட்ட அளவுக்கு பல மடங்கு அதிகமாக எடுத்தது தொடர்பாக மத்திய அமலாக்கத் துறை கணிசமாக ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க சமர்ப்பித்த அறிக்கை அரசின் ஆய்வில் உள்ளது. மதுரை உயர்நீதிமன்றம் 2025-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது.
பல இடங்களில் சோதனையும் மேற்கொள்ளப்பட்டது. ஆனால், உச்சநீதிமன்றம் ஒரு மேல்முறையீட்டில் உயர்நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதித்துள்ளது; இந்தத் தடையை நீக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். ஓர் அரசு ஊழியர் தொடர்ந்து 48 மணி நேரத்துக்கும் அதிகமாக சிறையில் இருந்தால், பணியிடைநீக்கம் செய்யப்பட வேண்டும் என்பது விதி. ஆனால், முந்தைய ஆட்சியில் ஊழல் வழக்கில் சிறையில் இருந்த அமைச்சர் பதவி நீக்கம் செய்யப்படாமல் இருந்த அவல நிலை அரங்கேறியது . அவர் மீது சட்ட மேல் நடவடிக்கை மூன்று ஆண்டுகளாக நிறுத்திவைக்கப்பட்ட கோப்பில் இப்போது அனுமதி வழங்கப்பட்டுள்ளது .
அதேபோல், உள்ளாட்சி குடிநீர் வடிகால் துறைகளில் நடைபெற்ற முறைகேடுகள் மீது சட்டப்படி நடவடிக்கை, அவசர கால குறுகியகால ஒப்பந்தங்களில் நடைபெற்ற அதிகார துஷ்பிரயோகம் கண்டறியப்பட்டு சுமார் 100 ஒப்பந்தங்கள் ரத்து, குறுகியகால ஒப்பந்தங்களை எந்தத் தருணங்களில் கையாளலாம் என்பது குறித்த கொள்கை அறிக்கை ஆகிய முக்கிய முடிவுகள் ஊழலை ஒழிக்க அரசின் உறுதியின் வெளிப்பாடு. நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை முக்கியமானது. மக்கள் எளிதாக அரசு சேவைகளைப் பெற 'வெற்றி செயலி' அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், அரசு அலுவலகங்களுக்கு அலையாமல் இணையம் மூலம் குடும்ப அட்டையில் மாற்றம் செய்துகொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது.
மக்களிடம் அதிகமாக உறவாடும் துறைகள் காவல், பள்ளிக் கல்வி, உயர் கல்வி, வருவாய்த் துறை மற்றும் உள்ளாட்சி, மின்சாரம், குடிநீர் வடிகால் வாரியம் அடங்கிய துறைகளில் அன்றாடம் மக்களின் குறைகளைக் களைவது ஒருபுறம் இருக்க, அவர்களுக்குத் தேவையான உரிமங்களையும் உரிமைகளை களங்கமின்றி பெற்றுத்தரும் அரசின் உத்தரவும் நடைமுறைக்கு வந்துள்ளது. காவல் துறையில் குற்றங்களைப் பதிவு செய்து அதன் நகல் கொடுக்க வேண்டும்.
இணையதளம் மூலம் புலன் விசாரணை முன்னேற்றத்தை தெரிந்துகொள்ள உதவ வேண்டும். உடல்கூறாய்வு, சாட்சிய நகல்கள் பதிவிறக்கம் செய்துகொள்ள அனுமதிக்க வேண்டும். அனைத்துத் துறைகளிலும் இணையவழியில் மக்களின் தேவைகளை நிறைவு செய்தால் ஊழல் முளைக்கும் வாய்ப்புகள் அழியும். தமிழக சட்டப்பேரவையில் புதிய வார்ப்புகளைப் பார்க்கையில் மகிழ்ச்சியாக உள்ளது.
முதல்முறையாக சட்டப்பேரவை நடவடிக்கைகளை நேரலையில் ஒளிபரப்ப உத்தரவிட்ட முதல்வர் ஜோசப் விஜய்க்கும், பேரவைத் தலைவருக்கும் பாராட்டுகள். இளம் அமைச்சர்கள், முதல் முறை உறுப்பினர்கள் சரளமாக தங்கள் கருத்துகளை தலைமையின் ஒப்புதல் கிடைக்குமோ என்ற தயக்கமின்றி பதிவு செய்கிறார்கள். அடுத்த பத்தாண்டுகள் தமிழ்நாடு எந்தத் திசையை நோக்கி முன்னேற வேண்டும் என்பதற்கான தொலைநோக்கு செயல் திட்டத்தின்படி 2030-இல் பொருளாதாரம் ரூ. 100 லட்சம் கோடியளவில் வளர வேண்டும் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஊழல் இல்லாத நிர்வாகம் இயங்கினால், முதலீட்டாளர்கள் தாமாகவே முன்வருவார்கள்; அண்மையில் பல நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களே அதற்குச் சான்று. பல முக்கியமான துறைகளில் ஊழல் களையப்பட்டுள்ளது. ஆயினும், ஊழல் ஒழிப்பின் உண்மையான பரிமாணம் நேர்த்தியான கட்டமைப்பை உறுதி செய்வதில்தான் இருக்கிறது. நிறைவேற்றப்பட்ட பொதுப் பணிகளில் பல பிரச்னைகளை நாடு முழுவதும் பார்க்கிறோம்.
கட்டிய பாலங்கள் சில மாதங்களிலேயே இடிந்து விழுகின்றன. உடலை உலுக்கும் குண்டும், குழியும், ஓட்டைகளும் இல்லாத சாலைகளே இல்லை! வளர்ந்துவரும் நாடுகளில் ஒன்றான தாய்லாந்துக்கு அதிகமாக இந்தியர்கள் செல்கிறார்கள். தமிழ்நாட்டின் பொருளாதாரத்துக்கு இணையாக உள்ள
தாய்லாந்தில் எவ்வளவு நேர்த்தியான சாலைகள்! பாதசாரிகளுக்கு அகலமான நடை பாதை, புதுப்பொலிவுடன் நிறுவப்பட்ட கட்டடங்களைப் பார்க்க முடிகிறது. சுதந்திரம் பெற்று 80 ஆண்டுகள் ஆகியும் தரமற்ற கட்டமைப்பை நாம் ஏன் சகித்துக் கொள்ள வேண்டும்? பொதுப் பணிகளில் தரம் நிர்ணயித்து அதை உறுதியாக செயல்படுத்த வேண்டும்.
உத்தரபிரதேச மாநிலம், வாரணாசியில் இருந்து படித்த இளம்பெண் குடியேற தமிழ்நாட்டுக்கு வந்ததன் காரணம் பெண்கள் பாதுகாப்பு, சட்டம்-ஒழுங்கு, தரமான கல்வி, மருத்துவ வசதி, பெண்களுக்கு இலவச பேருந்து பயணம், புதிய அரசின் ஊழலற்ற ஆட்சி என்று சமூக வலைதளங்களில் பதிவு செய்துள்ளார். பிகார், அஸ்ஸாம் மாநிலங்களில் பெண்களுக்கு ரூ.10,000 வரை அறிவித்து அரசியல் கட்சிகள் ஆட்சிக்கு வந்த நிலையில், தமிழ்நாட்டில் பெண்களுக்கும் குடும்பத்துக்கும் உபயோகமான சமையல் எரிவாயு சிலிண்டர்கள், எல்லா இடங்களுக்கும் பெண்கள் கட்டணமில்லாமல் பயணிக்கும் பேருந்து பயண வசதி அவரைக் கவர்ந்துள்ளதாகவும், இவை பொருளாதாரத்தை மேம்படுத்தும் என்றும் பதிவிட்டுள்ளார்.
நிர்வாகத்தில் ஊழல் காரணமாக அரசின் வரி வருவாய் 40 % வரை விரயமாகிறது என்று மத்திய விழிப்புணர்வு ஆணையம் கணக்கிட்டுள்ளது. ஊழல் ஒழிப்பு மூலம் இதை மிச்சப்படுத்தி மக்கள் நலனுக்குச் செலவிடுவது சாத்தியம் என்பது தெளிவு.
அரசு அலுவலகங்களுக்கு வரும் சாதாரண மக்கள், உழைப்பாளிகளைக் காக்க வைப்பது, வசதியானவர்களுக்கு உபசரிப்பு என்ற நிலை மாற வேண்டும்.
ஊழலுக்கு எதிரான முதல்வரின் போர் வெற்றி பெற அரசு அதிகாரிகள் முழுமையாக ஒத்துழைத்து, 'ஊழலற்ற மாநிலம் தமிழ்நாடு' என்று நிலை நாட்ட வேண்டும்.
கட்டுரையாளர்: முன்னாள் காவல் துறை தலைவர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.