'மூங்கில் இல்லையென்றால் புல்லாங்குழல் இசைக்க முடியாது': ராகுல் காந்தி
அரசு வேலையும் இல்லை, இடஒதுக்கீடும் இல்லை என்று ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.
அரசு வேலை மற்றும் இடஒதுக்கீடு குறித்து பிரதமர் நரேந்திர மோடியை காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.
மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏழு கட்டங்களாக நடைபெற்று வரும் நிலையில், தேர்தல் பிரசாரத்தில் பாஜக - காங்கிரஸ் தலைவர்கள் இடையே கடும் வார்த்தை போர் ஏற்பட்டுள்ளது.
ராஜஸ்தானில் கடந்த வாரம் பிரசாரம் செய்த மோடி, காங்கிரஸின் தேர்தல் அறிக்கையை விமர்சித்து அவர்கள் ஆட்சிக்கு வந்தால் பெண்களின் தாலிகூட மிஞ்சாது எனத் தெரிவித்திருந்தார்.
Advertisement
Advertisement
மேலும், காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் மத அடிப்படையில் இடஒதுக்கீட்டை கொண்டு வரும் என்றும் பிரதமர் மோடி விமர்சனம் செய்திருந்தார்.
இந்த நிலையில், ராகுல் காந்தி இன்று காலை வெளியிட்ட எக்ஸ் பதிவில் மோடியை விமர்சித்துள்ளார்.
“பிரதமர் மோடியின் பிரசார மந்திரம் இடஒதுக்கீடு நீக்கப்படும் என்பது. மூங்கில் இல்லையென்றால் புல்லாங்குழல் இசைக்காது. அதவாது, அரசு வேலை இல்லையென்றால் இடஒதுக்கீடு கிடைக்காது என்பதாகும்.
அரசுப் பணிகளை தனியார்மயமாக்கி, பழங்குடியினர், தலித்துகள் மற்றும் பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டை பாஜக அரசு ரகசியமாக பறித்து வருகிறது.
பொதுப்பணி நிறுவனங்களில் 2013-ல் 14 லட்சம் நிரந்தர வேலைகள் இருந்தன. ஆனால், 2023-ல் 8.4 லட்சமாக குறைந்துள்ளது.
பிஎஸ்என்எல், பெல் போன்ற நிறுவனங்களின் 6 லட்சம் பணிகள் காலி செய்யப்பட்டுள்ளது. ரயில்வே போன்ற துறைகளில் ஒப்பந்த தொழிலாளர்களை நியமிக்கின்றனர்.
நாட்டை கொள்ளையடிக்கும் மோடியின் மாடல் தனியார்மயமாக்கல். இதன்மூலம் தாழ்த்தப்பட்டோரின் இடஒதுக்கீடு பறிபோகிறது.
பொதுப்பணித்துறைகளை வலுப்படுத்தி, காங்கிரஸின் உத்தரவாதமான 30 லட்சம் வேலை வாய்ப்புகளை உருவாக்கி கதவுகளை திறப்போம்.” எனத் தெரிவித்துள்ளார்.
அதேபோல், நேற்றிரவு வெளியிட்ட பதிவில்,
“உங்களின் வீட்டை, பெண்களின் தாலியை, கால்நடைகளை காங்கிரஸ் பறித்துவிடும் என்று பிரதமர் பேசுவது விரக்தியில் தோல்வி பயத்தில் வரும் வார்த்தைகள்.
அவர்களின் 300 இடங்களில் இருந்து 150-ஐ பறித்து காங்கிரஸ் ஆட்சி அமைக்கவுள்ளதால் அவர் அவ்வாறு பொய் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். பிரதமர் பதவிக்கான கண்ணியத்தை மறந்து பொய் இயந்திரமாக மாறியுள்ளார்.
காங்கிரஸ் அரசு மக்களிடம் இருந்து எதையும் எடுக்காது. மாறாக மோடியின் பணக்கார நண்பர்களிடம் இருக்கும் பணங்களை எடுத்து மக்களுக்கு அளிக்கும்.
எங்களின் அரசு அதானிகளுக்கானது அல்ல, மக்களுக்கானது.” எனத் தெரிவித்திருந்தார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.