எடப்பாடி பழனிசாமியின் 4 ஆண்டுகால ஆட்சியை மட்டும் விமர்சித்த முதல்வர் ஸ்டாலின்!
எடப்பாடி பழனிசாமியின் 4 ஆண்டுகால ஆட்சியை மட்டும் விமர்சித்து பேசிய முதல்வர் ஸ்டாலினைப் பற்றி...
எடப்பாடி பழனிசாமியின் 4 ஆண்டுகால ஆட்சியை முதல்வர் ஸ்டாலின் கடுமையாக விமர்சித்து பேசினார்.
திமுக வேட்பாளர்கள் மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.
கூட்டணிக் கட்சித் தலைவர்களுக்கு நன்றி தெரிவித்து உரையைத் தொடங்கிய முதல்வர் ஸ்டாலின், திமுக வேட்பாளர்கள் அப்துல் வஹாஃப், அவைத் தலைவர் அப்பாவு மற்றும் காங்கிரஸ் வேட்பாளர்கள் ரூபி மனோகரன், வி.பி. துரை உள்ளிட்டோரை ஆதரித்து வாக்கு சேகரித்தார்.
Advertisement
திருநெல்வேலியில் நடைபெற்ற பிரசாரப் பொதுக்கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 2016 ஆம் ஆண்டு ஆட்சிக்காலத்தைத் தவிர்த்துவிட்டு அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமியின் நான்கு ஆண்டுகால ஆட்சியை மட்டும் கடுமையாக விமர்சித்துப் பேசினார். இதில், அதிமுக ஆட்சியில் நடைபெற்ற சட்டம் - ஒழுங்கு பிரச்சினை உள்ளிட்டவைகளையும் அவர் குறிப்பிட்டார்.
பொதுக்கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், “பத்தாண்டு அதிமுக ஆட்சியில் தமிழ்நாட்டின் நிர்வாகம் சீரழிந்து வளர்ச்சி முடக்கப்பட்டு, மாநிலமே படுபாதளத்துக்கு தள்ளப்பட்டதை நீங்கள் மறந்திருக்கமாட்டீர்கள்.
அதிமுக ஆட்சியின் கடைசி நான்கு ஆண்டுகளில் நடந்த குற்றங்களை யாரும் மறந்திருக்க மாட்டீர்கள், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த கொடநாட்டில் கொலைச் சம்பவம், நீட் தற்கொலை, பொள்ளாச்சியில் இளம்பெண்கள் பாலியல் வன்கொடுமை, தூத்துக்குடி ஸ்டெர்லைட் தொழிற்சாலைக்கு எதிராக அமைதியான போராட்டம் நடத்திக் கொண்டிருந்த அப்பாவி பொதுமக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.
இது மட்டுமல்லாமல் தில்லிக்கு காவடி தூக்கி, பொது சிவில் சட்டம், மூன்று வேளாண் சட்டங்கள், மக்கள் விரோத சட்டங்களை ஆதரித்து நீட்டிய இடத்தில் எல்லாம் கையெழுத்துப் போட்டது, தமிழ்நாட்டின் நிதி உரிமை, மாநில உரிமை ஆகியவற்றை இப்போது நம் மக்கள் இன்று நினைத்தாலும் பீதியடைவார்கள்.
உங்கள் ஆதரவோடு அப்பேற்பட்ட ஆட்சியில் இருந்து உங்களுக்கு விடியலைக் கொடுத்து தமிழ்நாட்டை உயர்த்தியிருக்கிறோம்” என்றார் முதல்வர் ஸ்டாலின்.