என்னை சுற்றியுள்ளவர்களை வைத்து அவதூறு பரப்புகிறார்கள்! விஜய் பேச்சு
திருநெல்வேலியில் தவெக தலைவர் விஜய் பேசியது பற்றி...
தேர்தலுக்கு முன்னதாக என்னை சுற்றியிருப்பவர்களை வைத்து அவதூறு பரப்புகிறார்கள் என்று தவெக தலைவர் விஜய் புதன்கிழமை தெரிவித்தார்.
திருநெல்வேலியில் தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் விஜய் இன்று பிரசாரம் மேற்கொண்டார்.
அப்போது அவர் பேசியதாவது:
Advertisement
“கரூர் விவகாரம் பற்றி அனைவருக்கும் தெரியும், இருந்தாலும் என் மேல் போட்டார்கள். மக்கள் மத்தியில் எடுபடாததால் ஜன நாயகனை முடக்கினார்கள். யார் முடக்கினார்கள் என்பது உங்களுக்கே தெரியும். அதுவும் எடுபடாததால் விஜய்க்கு மட்டும் தனியாக விதிமுறைகள் போட்டார்கள்.
தற்போது இத்தனை ஆண்டுகளாக காத்திருந்து சுற்றி இருப்பவர்களை வைத்து அவதூறு பரப்பினார்கள். அதுவும் மக்கள் மத்தியில் எடுபடவில்லை. எத்தனை சோதனைகள் கொடுத்தாலும் திமுக, பாஜகவினரால் என்னை மக்களிடம் இருந்து பிரிக்க முடியாது.
234 தொகுதியிலும் விஜய்தான் வேட்பாளர்கள். நமது வேட்பாளர்கள் அனைவரும் நமது குடும்பத்தில் இருப்பவர்களைதான் தேர்வு செய்துள்ளேன். விஜய்தான் வேட்பாளர், வேட்பாளர்தான் விஜய்.
இதுபோன்ற தேர்தலை இந்தியாவே பார்த்திருக்காது. 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் தேர்தல் கிடையாது. 50 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் அதிசய தேர்தல் இது. காமராஜர், அண்ணா, எம்ஜிஆர் போன்று யாரும் வந்துவிட மாட்டார்களா என நீங்கள் காத்திருப்பது தெரியும். முத்துராமலிங்கர், வீரன் சுந்தரலிங்கம், வஉசி, கட்டபொம்மன், ஒண்டிவீரன் மாதிரி தவெக ஆட்சி செய்யும்.” எனத் தெரிவித்தார்.