சர்வாதிகாரியாகத் துடிக்கிறது மத்திய அரசு: அமைச்சர் துரைமுருகன்
ஜனநாயகத்தை குழிதோண்டிப் புதைத்துவிட்டு மத்திய அரசு சர்வாதிகாரியாக மாறத் துடிப்பதாக அமைச்சர் துரைமுருகன் கடுமையாக விமர்சித்துள்ளார்.
ஜனநாயகத்தை குழிதோண்டிப் புதைத்துவிட்டு மத்திய அரசு சர்வாதிகாரியாக மாறத் துடிப்பதாக அமைச்சர் துரைமுருகன் கடுமையாக விமர்சித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் தொகுதி மறுவரையறை மசோதா தாக்கல் செய்யப்பட்டால் தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவம் கடுமையாக பாதிக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்திருந்தார். தமிழகம் முழுவதும் வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி கட்சியினர், பொதுமக்கள் போராட்டங்களில் ஈடுபடுவர் என்றும் அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.
நாமக்கல் மாவட்டத்தில் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த முதல்வர் ஸ்டாலின், கொடிக்கம்பத்தில் கருப்பு கொடியை ஏற்றி வைத்து எதிர்ப்பை வெளிப்படுத்தினார். அதன் பிறகு தொகுதி மறுவரை மசோதாவின் நகலை அவர் தீயிட்டு கொளுத்தி தனது எதிர்ப்பை வெளிப்படுத்தினார்.
Advertisement
இந்த நிலையில், திமுக பொதுச் செயலரும், அமைச்சருமான துரைமுருகன், தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து தனது இல்லத்தில் கருப்புக்கொடி ஏற்றிய எதிர்ப்பை வெளிப்படுத்தினார்.
அதனைத் தொடர்ந்து அவர் பேசுகையில், “ ஜனநாயகத்தை குழிதோண்டிப் புதைத்துவிட்டு மத்திய அரசு சர்வாதிகாரியாக மாறத் துடிக்கிறது. எந்த மாநிலத்தின் தயவும் இல்லாமல் தாங்கள் விரும்பிய சட்டங்களை இயற்றவும், திட்டங்களை நடைமுறைப்படுத்தவும் மத்திய அரசு நினைக்கிறது.
இந்தியாவை ஒரு கூட்டாட்சி நாடாக இருக்க விடாமல், சிறிது சிறிதாக ஒற்றை நாடாக மாற்றப் பார்க்கின்றனர். ஜனநாயகத்தை குழிதோண்டிப் புதைத்துவிட்டு சர்வாதிகாரியாக இருக்கத் துடிக்கிறார்கள். இது மிகப் பெரிய பிரச்னையாக உருவெடுத்தால் மக்கள் வீதியில் இறங்கிப் போராடுவார்கள்.
ஐந்து மாநில பேரவைத் தேர்தல்கள் நடைபெறும் இந்தச் சூழலில், இந்த மசோதாவைக் கொண்டு வருவது அவசியமா என மத்திய அரசைத்தான் கேட்க வேண்டும்.
மாநில உரிமைகளைப் பறிக்கும் இந்த விவகாரத்தில் பிரதான எதிர்க்கட்சியான அதிமுக எந்த எதிர்ப்பும் தெரிவிக்காமல் அமைதி காத்து வருகிறது. இதற்குக் காரணம், பாஜக விரித்த வலையில் அதிமுக முழுமையாக மாட்டிக்கொண்டுள்ளது” என்றார்.
முன்னதாக, நாடாளுமன்ற தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன.