ஆத்தூரில் 9 ஆவது முறையாக ஐ. பெரியசாமி போட்டி! தமிழகத்தில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வென்றவர்!
2021 தேர்தலில் ஆத்தூர் தொகுதியில் அமைச்சர் ஐ. பெரியசாமி சுமார் 1.36 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்...
திமுக சார்பில் ஆத்தூர் சட்டப்பேரவைத் தொகுதியில் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ. பெரியசாமி 9 ஆவது முறையாகப் போட்டியிடுகிறார்.
தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 23 அன்று நடைபெறுகிறது. திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளின் விவரங்கள் சனிக்கிழமை (மார்ச் 28) வெளியிடப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, திமுக நேரடியாகப் போட்டியிடும் 164 சட்டப்பேரவைத் தொகுதிகளின் வேட்பாளர் பட்டியலை அக்கட்சியின் தலைவரும், தமிழக முதல்வருமான மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இந்த நிலையில், கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் தமிழகத்தில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற அமைச்சர் ஐ. பெரியசாமி மீண்டும் ஆத்தூர் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடுகிறார்.
கடந்த 2021 தேர்தலில் திண்டுக்கல் மாவட்டத்தின் ஆத்தூர் தொகுதியில் போட்டியிட்ட அமைச்சர் ஐ. பெரியசாமி 1,65,809 வாக்குகள் பெற்று, 1 லட்சத்து 35 ஆயிரத்து 571 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்ட பாமக வேட்பாளர் திலகபாமா 30,238 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார்.
முன்னதாக, கடந்த 1989 முதல் திமுக சார்பில் ஆத்தூர் தொகுதியில் போட்டியிட்டு வரும் அமைச்சர் ஐ. பெரியசாமி, 1991 மற்றும் 2001 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தல்களில் மட்டும் தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது.