பெரும்பான்மை கிடைக்காவிட்டால் விஜய்யுடன் சேர்ந்து தே.ஜ.கூட்டணி ஆட்சி! - மத்திய அமைச்சர் அத்வாலே
தமிழகத்தில் ஆட்சி அமைக்க பெரும்பான்மை பலம் கிடைக்கவில்லையென்றால் விஜய்யுடன் பேசி தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைக்கும் என்று மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே கூறினார்.
தமிழகத்தில் ஆட்சி அமைக்க பெரும்பான்மை பலம் கிடைக்கவில்லையென்றால் தேர்தலுக்குப் பிறகு தவெக தலைவர் விஜய்யுடன் பேசி தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைக்கும் என்று இந்திய குடியரசு கட்சியின் தேசிய தலைவரும் மத்திய அமைச்சருமான ராம்தாஸ் அத்வாலே கூறினார்.
புதுச்சேரிக்கு செவ்வாய்க்கிழமை வந்திருந்த ராம்தாஸ் அத்வாலே, அவரது கட்சியினர் மற்றும் செய்தியாளர்கள் மத்தியில் பேசுகையில், “நாகாலாந்து மாநிலத்தில் இந்திய குடியரசு கட்சிக்கு 2 எம்.எல்.ஏக்கள் இருக்கின்றனர். மேலும், மணிப்பூரிலும் அதிக வாக்குகளைப் பெற்ற கட்சியாக இருக்கிறது. அதனால், இந்த இரண்டு மாநிலங்களிலும் அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக இந்திய தேர்தல் ஆணையம் அங்கீகாரம் அளித்துள்ளது.
தேசிய அங்கீகாரம் கிடைக்கும் வகையில் இந்திய குடியரசு கட்சியை வலிமைப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகிறோம். தற்போது 5 மாநிலங்களுக்கான தேர்தலை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அசாமிலும், புதுச்சேரியிலும் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு ஏற்கெனவே இருக்கிறது. இங்கு மீண்டும் இக் கூட்டணி அரசு அமைய நம் கட்சியினர் பாடுபட வேண்டும்.
கேரளத்தைப் பொறுத்தவரை இப்போது ஆளும் கம்யூனிஸ்ட் ஆட்சியின் மீது மக்கள் நம்பிக்கை இழந்துவிட்டனர். அங்கு பாஜக வெல்லும். மேற்கு வங்கத்தைப் பொறுத்தவரை மமதாவின் ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்து பாஜக ஆட்சி மலரப்போகிறது.
தமிழ்நாட்டில் மீண்டும் திமுக ஆட்சிக்கு வராது. அங்கு நடிகர் விஜய்யும் தேர்தலில் போட்டியிடுகிறார். தேர்தலுக்குப் பிறகு ஆட்சி அமைக்கப் பெரும்பான்மை பலம் கிடைக்கவில்லை என்றால் தவெக தலைவர் விஜய்யுடன் பேசி தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைக்கும். அதனால், வரும் தேர்தலுக்குப் பிறகு 5 மாநிலங்களிலும் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைக்கும்.
புதுச்சேரியில் தேர்தலுக்குப் பிறகு இந்திய குடியரசு கட்சியின் புதுச்சேரி தலைவர் ஞானமூர்த்திக்கு வாரியத் தலைவர் கிடைக்க நடவடிக்கை எடுப்பேன். நாட்டின் வலிமையான பிரதமராக 3-வது முறையாகப் பதவி வகித்து வரும் நரேந்திர மோடி திகழ்கிறார். அவரது தலைமையின் கீழ் நாடு வளர்ச்சி அடைந்து வருகிறது” என்றார் ராம்தாஸ் அத்வாலே.
அவர் செய்தியாளர்கள் சந்திப்பின் போது இந்திய குடியரசுக் கட்சியின் புதுச்சேரி தலைவர் ஞானமூர்த்தி மற்றும் நிர்வாகிகள் பலரும் உடனிருந்தனர்.