2.4.1976: சென்னை நகருக்கு கோடைகால குடிநீர்
சென்னை நகருக்கு கோடைகால குடிநீர் விநியோகம் பற்றி...
சென்னை: ஏப்ரல், 1 - கோடை காலம் துவங்கி, சென்னை நகர மக்களின் குடிநீர்த் தேவை அதிகரித்துள்ளதால், புழலேரியிலிருந்து அன்றாடம் வழங்கப்படும் குடிநீரின் அளவு 4.3 கோடி காலனிலிருந்து 4.4 கோடி காலனாக உயர்த்தப்பட்டுள்ளது என்று கார்பொரேஷன் சிறப்பதிகாரி டி. வி. அந்தோனி இன்று நிருபர்களிடம் கூறினார்.
இந்த அதிகரிப்பு இன்று காலை முதலே அமுல்படுத்தப்பட்டுவிட்டது; இந்த அளவும் மேலும் படிப்படியாக உயர்த்தப்பட்டு ஏப்ரல் 16ம் தேதி முதல் 4.5 கோடி காலனாக உயர்த்தப்படும் என்றும் அந்தோனி மேலும் கூறினார்.
அவசியத் தேவையாகிய குடிநீரினை தோட்டங்களுக்குப் பாய்ச்சுதல் போன்ற செயல்கள் கண்டிப்பாக தவிர்க்கப்பட வேண்டும். மீறி யாராவது தவறாக பயன்படுத்தி அது கண்டுபிடிக்கப்படுமேயானால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுவதுடன் தண்ணீர் வழங்குதல் உடனடியாகத் துண்டிக்கப்படும் என்று கார்ப்பரேஷன் சிறப்பதிகாரி சுடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Advertisement
Advertisement
பாகிஸ்தான் அறிக்கைகளில் முரண்பாடுகள் - மத்திய மந்திரி தகவல்
புதுடில்லி, ஏப். 1- பரஸ்பர அக்கறையுடைய எல்லா விஷயங்கள் பற்றியும் இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயாராயிருப்பதாக பாகிஸ்தானின் பாதுகாப்பு, வெளி உறவு துணை அமைச்சர் கூறியிருப்பதை இந்தியா கவனத்தில் எடுத்துக் கொண்டிருப்பதாக இன்று லோக் சபையில் தெரிவிக்கப்பட்டது.
ஆனால் பாகிஸ்தான் அரசின் அறிக்கைகளிலும் போக்குகளிலும் முரண்பாடுகள் காணப்படுவதாக உதவி, வெளிநாட்டு மந்திரி விபின்பால் தாஸ் கூறினார்.
சமாதான முறைகள் மூலம் நேரடியாக எல்லாத் தகராறுகளையும் தீர்த்துக் கொள்ள பாகிஸ்தானுடன் பேச்சு நடத்த இந்தியா இப்போதும் தயாராயிருப்பதாக அவர் ஊர்ஜிதம் செய்தார்.
பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்க இந்தியாவோ அல்லது பாகிஸ்தானோ உருப்படியான யோசனை எதையாவது தெரிவித்திருக்கிறதா என்று கேட்டபோது, உறவை சகஜப்படுத்துவதற்காக மேற்கொண்டு சாத்தியக்கூறுகளை ஆராயும் பொருட்டு பாகிஸ்தானுடன் கடிதப் போக்குவரத்து தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறதுஎன்று பிபின்பால்தாஸ் கூறினார். விமானப் பயணங்கள் பற்றி பாகிஸ்தானின் யோசனை குறித்தும் கருத்துக்கள் பரிவர்த்தனை நடந்துள்ளன என்றார்.
April 2, 1976: Summer Drinking Water for Chennai City
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.