19.4.1976: “ஆர்யபட்டா”வின் ஓராண்டு விண்வலம் இன்றுடன் பூர்த்தி
“ஆர்யபட்டா”வின் ஓராண்டு விண்வலம் இன்றுடன் பூர்த்தி...
பெங்களூர், ஏப். 18- இந்திய விண்வெளிக் கோள் "ஆர்யபட்டா"வின் ஓராண்டு விண்வெளி வலம் நாளைய தினம் முடிவடைகிறது.
"ஆர்யபட்டா" சென்ற ஆண்டு ஏப்ரல் மாதம் 19 ஆம் தேதியன்று ரஷிய விண்வெளிக்கோள் ஏவுகளத்திலிருந்து ஏவப்பட்டது.
"ஆர்யபட்டா" அதன் அடிப்படை பணிகளில் பெரும்பாலானவற்றை முடித்துவிட்டது. விண்வெளிக்கோள் தொழில்நுணுக்கங்களில் நாட்டின் ஆற்றலும் நிலைநாட்டப்பட்டுள்ளது.
Advertisement
இங்கு பீனியாவிலுள்ள இந்திய விஞ்ஞான விண்வெளிக்கோள் திட்டத்தை இன்று நிருபர்கள் பார்வையிட்டனர்.
இந்தியாவின் வருங்கால விண்வெளிக்கோள் திட்டங்களுடன் சம்பந்தப்பட்ட அம்சங்கள் ஆராய்ச்சிகளும், ”ஆர்யபட்டா” மூலம் வெற்றிகரமாக நடந்ததென்று இந்திய விண்வெளி ஆராய்ச்சி ஸ்தாபனத் தலைவர் பேராசிரியர் தவான், இந்திய விஞ்ஞான விண்வெளிக்கோள் திட்ட டைரக்டர் பேராசிரியர் ஊ.ஆர். ராவ் கூறினர்.
'"ஆர்யபட்டா" 5465 வது வலம் வந்து கொண்டிருக்கையில் நிருபர்கள் பார்த்தனர். திட்டமிட்டபடி "ஆர்யபட்டா"வில் உள்ள எல்லா தொழில்நுட்பக் கருவிகளும், துணைக் கருவிகளும் இயங்கி வருகின்றன என்று கூறினர். "ஆர்யபட்டா" அழிவதற்கு முன் 8 ஆண்டுகாலம் விண்வெளியில் இருந்து வரும்.
விண்வெளிக்கோள் தொழில்நுட்ப அறிவை பின்னடைந்த நாடுகளுக்கு இந்தியா தரத் தயாரென்றும், இதுவரை எந்த பின்னடைந்த நாடும் கோரவில்லை என்றும் தவான் கூறினார்.
"ஆர்யபட்டா'வின் ஓராண்டு சாதனைகளைப் பற்றிய வண்ணப் படத் துண்டுப் பிரசுரம் இருக்கிறதென்றும் இது நாட்டிலுள்ள எல்லா கல்விச் சாலைகளிலும் வைக்கப்படும் என்றும் கூறினார். எல்லா தகவல்களும் எளிய நடையில் விளக்கப்பட்டுள்ளன.
விண்வெளிக்கோள் மூலம் 2400 கிராமங்களில் போதனா திட்டம் நிறைவேற்றப்படுமென்றும் நம்பிக்கை தெரிவித்தார்.