18.8.1976: த.நா.வில் ராஷ்டிரபதி ஆட்சியை மேலும் 6 மாதம் நீடிக்கும் தீர்மானம் நிறைவேறியது
அரை நூற்றாண்டுக்கு முன், தினமணி நாளிதழில் இன்றைய நாளில் வெளியான முக்கிய செய்தி.
புது டில்லி, ஆக: 17- வரும் செப்டம்பர் 10ம் தேதியிலிருந்து தமிழ் நாட்டில் ஆட்சியை மேலும் ராஷ்டிரபதி 6 மாதங்களுக்கு நீடிக்கும் அரசாங்க மசோதா இன்று ராஜ்ய சபையில் நிறைவேறியது. ராஷ்டிரபதி ஆட்சி இங்கு செப்டம்பர் 9ந் தேதியுடன் காலாவதியாக இருந்தது.
தீர்மானத்தை உள்விவகாரத் துறை மந்திரி கே. பிரம்மானந்த ரெட்டி பிரேரேபித்தார். ராஷ்டிரபதி ஆட்சியை மேலும் 6 மாதங்களுக்கு நீடிக்க அரசாங்கம் விரும்புவதற்கு அவர் இரண்டு காரணங்கள் கூறினார்:
தற்போது தமிழகத்தில் உள்ள வறட்சி நிலவரத்தைச் சமாளிப்பதில் அரசாங்கம் முழுமூச்சாக ஈடுபட்டிருக்கிறது. ஆகையால் செப்டம்பர் 9ந் தேதிக்குள் அங்கு தேர்தல்கள் நடத்துவது முடியாத காரியம். இது அவர் கூறிய முதல் காரணம்.
Advertisement
Advertisement
மேலும், தமிழ் நாட்டில் நிர்வாகத்தைத் தூய்மைப்படுத்தும் இயக்கம் தற்போது நடக்கிறது. அதை மேலும் நீடிப்பது விரும்பத்தக்கது. அத்துடன் தமிழகத்தின் வேகமான வளர்ச்சிக்கும் நலனுக்கும் இன்னும் சிறிதுகாலம் தற்போது நடைபெறும் முயற்சிகள் நீடிப்பதும் விரும்பத்தக்கது. இது அவர் கூறிய இரண்டாவது காரணம். ...
... ஒரே ஒரு உறுப்பினர் என்.எச். கும்பாரே (ஆர்.பி.ஐ) மட்டும் விவாதத்தில் பங்கு கொண்டார். தாழ்த்தப்பட்டோர். மலை ஜாதியினருக்கு தமிழ் நாட்டில் இடங்கள் ஒதுக்குவது திட்டத்தை குறித்த விவரமாகப் பரிசிலனை செய்யவேண்டுமென்று அவர் கேட்டுக் கொண்டார். மற்றபடி தீர்மானத்தைத் தாம் ஆதரிப்பதாகச் சொன்னார்.
பிரம்மானந்த ரெட்டி, விவாதத்துக்குப் பதில் அளிக்கையில் இப்போது கொண்டு வந்திருக்கும் தீர்மானத்தில் ராஷ்டிரபதி ஆட்சி மேலும் 6 மாதங்களுக்கு நீடிக்கத் தாம் சபையின் அனுமதியைக் கோரியிருப்பதாகவும், ஆனாலும் எதிர் காலத்தில் என்ன நடக்கும் என்பதைத் தாம் திட்டவட்டமாகக் கூற முடியாது என்றும் கூறினார். கும்பாரே கூறிய விஷயம் கவனத்தில் கொள்ளப்படும் என்று உறுதியளித்தார்.
அங்குள்ள நிலவரத்தை நேரில் அறிந்து வரத் தாம் அடுத்த மாதம் தமிழ் நாட்டுக்கு செல்ல விருப்பதாகவும் அவர் கூறினார்.
பிலிப்பைன்ஸ் பயங்கர பூகம்பத்தில் 1800 பேர் பலி
மணிலா, ஆக, 17- பிலிப்பைன்ஸ் நாட்டில் தென் மாநிலங்களில் செவ்வாய் அதிகாலையில் ஏற்பட்ட கடும் பூகம்பத்தில் குறைந்தபட்சம் 1800 பேருக்கு மேல் மாண்டனர்; நூற்றுக்கணக்கான பேர் காயமடைந்தனர்; 49 பேர் காணாமல் போனார்கள்; 10 ஆயிரம் பேர் வீடிழந்தனர்.
இந்த பூகம்பத்தை அடுத்து பிலிப்பைன்ஸ் நாட்டில் அவசர நிலை அமல் செய்யப்படுவதாக அதிபர் பெர்டினாண்ட் மார்க் கோஸ் அறிவித்தார்; நிவாரண நடவடிக்கைகளை விரிவாகத் துவக்குவதற்கும் அவர் உத்தரவிட்டார்.
பூகம்ப சாவுத் தொகை மேலும் உயரக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுவதாக ஓர் அதிகாரி தெரிவித்தார். பிலிப்பைன்சில் ஏற்பட்ட பூகம்பங்களிலேயே மிகவும் மோசமானது இதுதான் என்று அவர் கூறினார்.
இந்த பூகம்பத்தில் மிகவும் பாதிக்கப்பட்டது மிண்டானோ என்னும் தீவாகும்; அங்கு மட்டும் 400 பேர் இறந்து போனார்கள்.
பூகம்பத்தின் விளைவாக கடலில் ராட்சத அலைகள் எழும்பியதால் கரையோரத்திலிருந்த பல வீடுகள் அடித்துச் செல்லப்பட்டன. ...
18.8.1976: A resolution extending President's Rule in Tamil Nadu for another six months was passed.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.