19.8.1976: பிலிப்பைன்ஸ் பூகம்ப சாவு 4,000 - 2,000 பேரை காணோம்
அரை நூற்றாண்டுக்கு முன், தினமணி நாளிதழில் இன்றைய நாளில் வெளியான முக்கிய செய்தி.
மணிலா, ஆக.18 - பிலிப்பைன்ஸ் நாட்டில் செவ்வாய்க்கிழமையன்று ஏற்பட்ட பூகம்பத்தினாலும், கடல் கொந்தளிப்பின் விளைவாகவும் மாண்டவர்கள் எண்ணிக்கை 4,000 ஆக உயர்ந்துள்ளது என்றும் 2 000-க்கும் அதிகமான பேர் காணப்படவில்லை என்றும் பிலிப்பைன்ஸ் அதிகாரிகள் இன்று தெரிவித்தனர்.
மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்ட மிண்டானோ தீவில் ஏராளமான வீடுகள் பூகம்பத்தினால் இடிந்து விழுந்தன அல்லது ராட்சஸ அலைகளினால் அடித்துச் செல்லப்பட்டன. இங்கு மீட்சிக் குழுவினர் இடிபாடுகளிடையே மீட்சிப் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து மாண்டவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
நேற்றிரவு ஆயிரக்கணக்கான மக்கள் திறந்த வெளியில் அவசரமாக அமைக்கப்பட்ட கூடாரங்களில் தங்கியிருந்தனர். பூகம்பம் ஏற்பட்ட பிறகு பூமிக்கடியில் குமுறல்கள் இருந்ததால் அவர்கள் பீதி கொண்டு இரவு நேரத்தைத் தூங்காமலேயே கழித்தனர்.
Advertisement
Advertisement
90,000 பேர் வீடிழந்தனர்
பூகம்பம், கடல் கொந்தளிப்பினால் வீடிழந்தவர்கள் எண்ணிக்கை 90 ஆயிரத்தை எட்டியுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். நூற்றுக் கணக்கான பேர் காயங்களுக்குச் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மிண்டானோ தீவு பூகம்பத்தினால் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டது. இந்த பூகம்பம் ஸெலபஸ் கடலில் மையம் கொண்டது. இந்தக் கடலில் 10 மீட்டர் உயரத்திற்கு ராட்சஸ அலைகள் எழும்பின.
பூகம்பம் ஏற்பட்டபோது ராட் ்சஸ அலைகள் எழுந்ததால் தாழ்வான பகுதிகளிலிருந்த ஏராளமான வீடுகள் அடித்துச் செல்லப்பட்டன. இதனால் நூற்றுக்கணக்கான மக்கள் மாண்டனர்.
மாண்டவர்களில் பெரும்பாலானவர்கள் குழந்தைகள். அவர்கள் வீடுகளில் படுத்துறங்கிக் கொண்டிருந்தபோது இந்தப் பரிதாபம் ஏற்பட்டது.
மருத்துவக் கல்லூரிகளுக்கு தகுதி அடிப்படையிலேயே மாணவர்கள் தேர்வு - பெண்கள், பின்தங்கிய, தாழ்த்தப்பட்டவர் அதிகம் பேர் இடம் பெற்றதாகத் தகவல்
சென்னை, ஆக:18- பெண்கள், பின்தங்கிய சமுதாயத்தினர், தாழ்த்தப்பட்ட வகுப்பினர், கிராமப் பகுதிகளிலிருந்து படித்து வந்தவர்கள் ஆகியோர் இந்த ஆண்டு மருத்துவக் கல்லூரித் தேர்வில் அதிக எண்ணிக்கையில் சேர்த்துக் கொள்ளப்பட்டிருக்கிறார்கள் என்று மருத்துவக் கல்லூரித் தேர்வுக் குழுவைச் சேர்ந்த டாக்டர் கபீர், டாக்டர் பி.பாலகோபால ராஜு ஆகியோர் இன்று நிருபர்களிடம் தெரிவித்தார்கள். முழுக்க முழுக்க தகுதி அடிப்படையிலேயே இந்த ஆண்டு மாநிலத்தில் மருத்துவக் கல்லூரிகளில் மாணவ, மாணவிகள் சேர்க்கப்பட்டனர் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
இந்த ஆண்டில்தான் மருத்துவக் கல்லூரிகளுக்கு மாணவ, மாணவிகள் எந்த அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டார்கள் என்பது குறித்துப் பகிரங்கமாக விவரங்களுடன் அரசு அறிவிப்புச் செய்தது.
இந்த ஆண்டு மருத்துவக் கல்லூரிகளுக்கு மாணவ, மாணவியரைச் சேர்த்துக் கொள்வதில் சிபாரிசு, வெளியார் தலையீடு ஆகியவற்றுக்குக் கிஞ்சித்தும் இடம் அளிக்கப்படவில்லை. கல்லூரித் தேர்வில் விஞ்ஞானப் பாடங்களில் அவர்கள் பெற்ற மதிப்பெண்கள், நேர்முகப் பேட்டியில் பெற்ற மதிப்பெண்கள் ஆகியவற்றின் அடிப்படையில் முற்றிலும் தகுதியின் பேரில் மட்டுமே மாணவ மாணவியர் சேர்த்துக் கொள்ளப்பட்டனர் என்று கபீரும், பாலகோபால ராஜுவும் கூறினார்கள். ...
August 19, 1976: Philippines earthquake death toll 4,000 – 2,000 people missing.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.