4.9.1976: கிரிக்கெட் டெஸ்டில் ஆடுவோருக்கு இனி அலவன்ஸ் ரூ. 5000
அரை நூற்றாண்டுக்கு முன், தினமணி நாளிதழில் இன்றைய நாளில் வெளியான முக்கிய செய்தி.
புதுடில்லி, செப். 3- கிரிக்கெட் டெஸ்டில் இப்போது ஆடும் ஒவ்வொரு ஆட்டக்காரருக்கும் ஒவ்வொரு டெஸ்டுக்கும் ரூ. 3000 அலவன்ஸ் வழங்கப்படுகிறது. இனி இதை ரூ. 5000த்துக்கு உயர்த்துவது என்று இந்திய கிரிக்கெட் கண்ட்ரோல் போர்டு முடிவு செய்திருப்பதாகத் தெரியவருகிறது.
நியூஜிலாந்துக்கும் இங்கிலாந்துக்கும் எதிராக இவ்வாண்டு நடக்கவிருக்கும் கிரிக்கெட் டெஸ்டுகளிலிருந்து இது அமலுக்கு வரும்.
அண்மையில் சுநீல் சுவாஸ்கர், எஸ். வெங்கட்ராகவன் ஆகியோர் அடங்கிய ஆட்டக்காரர்கள் நலக் கமிட்டியின் தூது கோஷ்டி, புது டில்லியில் போர்டு கமிட்டியைச் சந்தித்தபோது இம்முடிவு தெரிவிக்கப்பட்டது. எனவே நியூஜிலாந்துக்கும் இங்கிலாந்துக்கும் எதிராக நடக்கும் எல்லா டெஸ்டுகளில் (8 டெஸ்டுகள்) ஆடும் ஆட்டக்காரர்களுக்கு மொத்தம் ரூ. 40,000 கிடைக்கும். இது தவிர ஓட்டல் செலவு.
Advertisement
Advertisement
உள் நாட்டு பயண அலவன்ஸ், கிரிக்கெட் சாதனங்களுக்கான அலவன்ஸ் ஆகியவையும் கிடைக்கும்.
இந்தியாவுக்கு வெளியே சுற்றுப்பிரயாணம் செய்யும் கோஷ்டியில் இடம் பெறும் எல்லா ஆட்டக்காரர்களுக்கும் தலா ரூ. 3 லட்சம் வரை இன்ஷ்யூரன்ஸ் செய்யும் திட்டத்தையும் போர்டு ஆரம்பித்துள்ளது. அண்மையில் நியூஜிலாந்து, மேற்கிந்தீஸ் சுற்று பிரயாணங்களின் போது இத்திட்டம் அமலுக்கு வந்தது.
தென்னாப்பிரிக்காவில் கலப்பு இன மக்கள் மீது போலீஸ் சுட்டு இருவர் சாவு
கேப்டவுன். செப்: 3- தென்னாப்பிரிக்காவில் கேப்டவுன் நகரத்தின் புறப்பகுதிகளில் கலப்பு இன மக்கள் பெருமளவில் வாழும் நகரங்களில் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது போலீஸார் நேற்று துப்பாக்கிப் பிரயோகம் செய்ததில் இரண்டு பேர் உயிரிழந்தார்கள். ஒருவர் காயமடைந்தார்.
தென்னாப்பிரிக்க அரசின் நிற வெறிக் கொள்கையை எதிர்த்து சுமார் 3000 முல்லாடோ மாணவர்கள் டெனன்டவுன் கேப்டவுனில் ஆர்ப்பாட்டம் செய்தார்கள். அவர்களைக் கலைக்க போலீஸார் கண்ணீர்ப் புகைக்குண்டுகளை வெடித்தார்கள். கூட்டத்தினரை கலையுமாறு போலீஸார் எச்சரித்த பின்னர் கண்ணீர்ப் புகைக்குண்டுகள் வெடிக்கப்பட்டன.
தென்னாப்ரிக்க நாட்டில் சென்ற ஜூன் மாதத்தில் சோவேடோ நகரில் முதன் முதலாக இனக் கலவரங்கள் ஆரம்பித்தன. அதற்குப் பிறகு பல இடங்களில் கலவரங்களும், ஆர்ப்பாட்டங்களும் நடந்துள்ளன. வெள்ளைக்காரர்கள் வாழும் பகுதியில் பெரிய அளவில் இனக் கலவரம் நடந்தது இதுதான் முதல் முறை ஆகும். ...
Allowance for cricketers playing in Test matches set at Rs. 5,000.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.