முகப்பு
மனநல மருத்துவம்

ஆண்களுக்காக ஒரு ஆராய்ச்சி! பெண்கள் படிக்க வேண்டாம்!

உலகில் எந்த பிரச்னைக்கும் தீர்வு கண்டு பிடித்துவிடலாம் ஆனால் ஆண் பெண் உறவில்

Updated On : 26 ஜூன் 2017, 4:24 pm IST
பகிர்:

உலகில் எந்த பிரச்னைக்கும் தீர்வு கண்டு பிடித்துவிடலாம் ஆனால் ஆண் பெண் உறவில் ஏற்படும் சிக்கல்களுக்கும் பிரச்னைகளுக்கும் முடிவென்பதே கிடையாது. 'கல்யாணமா அது ஒரு ஜெயில் வாழ்க்கை' என்று ஆண்களும், 'இப்ப கல்யாணத்துக்கு என்ன அவசரம்' என்று கூடுமானவரை அதை ஒத்திப் போடுவதில் பெண்களும் திருமண வாழ்க்கையை ஒவ்வாமையாக நினைத்து ஒதுக்குகிறார்கள் அல்லது தள்ளிப் போடுகிறார்கள். ஆனால் உண்மையில் பெண்களை விட ஆண்களுக்கு திருமண வாழ்க்கை மன அழுத்தத்தைக் குறைக்கிறது என்கிறது ஒரு ஆராய்ச்சி. 

திருமணம் முடிந்து சில மாதங்கள் வரை பலருக்கு வாழ்க்கை அழகாக போய்க் கொண்டிருக்கும். ஆனால் நாளாக ஆக ஒருவர் மற்றவரை குறை சொல்லத் தொடங்கி மெல்ல பிரச்னைகள் வேர் விடத் தொடங்கும். அது பெரிதாகி ஒரு கட்டத்தில் சண்டை சச்சரவு என்பது வாழ்வின் ஒரு அங்கமாகவே மாறிப்போய்விடும். கணவன் மனைவி ஜோக்ஸ், மீம்ஸ்கள் உருவாக்குவது ஆண்கள் தான் அதிகம். மிக சிலர் தவிர்த்து பெரும்பாலனவர்களுக்கு திருமண வாழ்க்கை என்பது பெரிய அட்ஜெஸ்ட்மெண்ட் தான். வேறு வழியில்லாமல் ஒரே கூரையின் கீழ் வாழும் தம்பதியினர் தான் உலகம் முழுவதும் இருக்கிறார்கள்.

தற்போதைய சூழலில் பிடிக்காத உறவுக்குள் யாரும் இருக்க விரும்பாத நிலையில் விவாகரத்து வழக்குகள் பெருகி வருகின்றன. விவாகரத்துக்குப் பின் பெண்கள் கூட ஓரளவுக்கு மீண்டு வருகின்றனர். ஆனால் ஆண்கள் சற்று அதிகம் பாதிப்படைகிறார்கள். எனவே ஆண்களை ரிலாக்ஸ் செய்வது திருமண உறவு தான் என்று இந்த ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன. எந்த வயதிலும் பெண்களை விட ஆண்கள்தான் தாம்பத்திய வாழ்க்கையில் அதிக சுகமும்,  சந்தோஷமும் அடைகிறார்கள் என்று மேலும் இந்த ஆய்வு தெரிவிக்கிறது. 

Advertisement

Advertisement

ஆனால் பெண்களின் நிலை இதற்கு நேர்மாறாகவே உள்ளது. திருமணமான பெண்களை விட தனியே வாழும் பெண்கள்தான் சந்தோஷமாக இருக்கிறார்கள் என்கிறது ஆராய்ச்சி. வயதான காலத்தில் கணவருக்கு முன்னால் மனைவி இறந்துவிட்டால் பெரும்பாலான கணவர்கள் அந்த வாழ்க்கையை, மனைவி இல்லாத தனிமையை எதிர்கொள்வதில் கஷ்டப்படுகிறார்கள். காரணம் அவர்களின் ஒவ்வொரு தேவையையும் மனைவியே பூர்த்தி செய்பவராக இருந்துள்ளார். அவரின் மறைவுக்குப்  பின்னால் இவர்கள் எந்த வேலையும் செய்யத் தெரியாதவர்களாக பிள்ளைகளிடம் சார்ந்து வாழ்பவர்களாக இருக்க நேரிடுகிறது. பல முதியோர்கள் மனைவி இறந்த ஒரு சில ஆண்டுகளில் இறப்பதும் தனிமை போன்ற பிரச்னைகளால் தான்.

ஆனால், பெண்களைப் பொருத்தவரை கணவனை இழந்த பின்னரும் பல காலம் வாழ்வார்கள். குடும்பத்தைப் பேணி தன் குழந்தைகளையும் நன்றாக வளர்த்து படிக்க வைத்து, ஆளாக்கிவிடுவார்கள். பிள்ளைகள் பிரிந்து அவரவர் வழியே சென்றாலும் பெண்களை பொருத்தவரையில் தனிமை ஒரு பெரிய பிரச்னையாக இருப்பதில்லை. அக்கம் பக்கத்து பெண்களிடம் நட்புறவு பாராட்டி எப்படியோ தங்கள் காலத்தை சந்தோஷமாகவே கழித்துவிடுகிறார்கள். வோல்கா எழுதிய ‘துணை’ என்ற பிரபலமான சிறுகதையின் கதை இதற்குச் சான்று. 

உடலுறவு பற்றிய ஆராய்ச்சி கட்டுரைகள் Sex In America என்ற பெயரில் பெரிய புத்தகமாக 1994-ல் வெளியானது. அதில்  ஒரு கட்டுரையில் செக்ஸ் வாழ்க்கையில் அதிக சந்தோஷம் யாருக்குக் கிடைக்கிறது என்ற கேள்விக்கு 88 சதவிகிதம்  திருமணமானவர்கள்தான்  என்று கூறப்பட்டுள்ளது. எனவே திருமண உறவுதான் 100 சதவிகிதம் வெற்றி பெறும் என முடிவாக சொல்லிவிட முடியாது. அது அவரவர் வாழ்க்கை. திருமணத்தைப் பொருத்தவரை வெற்றி, தோல்வி என்பது சம்பந்தப்பட்ட தம்பதியரைப் பொருத்துதான் அமையும்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.