FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

யேமனில் 4 இந்தியர்கள் பலி: ஆபத்தான நாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் தாயகம் திரும்ப சுஷ்மா வேண்டுகோள்

யேமனில் பயங்கரவாதிகளின் துப்பாக்கிச் சூட்டில் இந்தியாவைச் சேர்ந்த 4 செவிலியர்கள் பலியாகியுள்ள நிலையில், ஆபத்தான நாடுகளில் வாழும் இந்தியர்கள்

24 ஜனவரி 2024, 10:11 pm IST
பகிர்:

யேமனில் பயங்கரவாதிகளின் துப்பாக்கிச் சூட்டில் இந்தியாவைச் சேர்ந்த 4 செவிலியர்கள் பலியாகியுள்ள நிலையில், ஆபத்தான நாடுகளில் வாழும் இந்தியர்கள் அனைவரும் தாயகம் திரும்புமாறு வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் வேண்டுகோள் விடுத்தார்.
 யேமன் நாட்டின் ஏடன் நகரில், கொல்கத்தாவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் தொண்டு நிறுவனம் நடத்தி வரும் வயதானவர்களை பராமரிக்கும் மையத்துக்குள் புகுந்து பயங்கரவாதிகள் வெள்ளிக்கிழமை திடீர் தாக்குதல் நடத்தினர். இதில், இந்தியாவைச் சேர்ந்த 4 செவிலியர்கள் உள்பட 16 பேர் பலியாகினர். மேலும் பலர் பலத்த காயமடைந்தனர்.
 இந்நிலையில், யேமன் போன்ற ஆபத்தான நாடுகளில் வாழும் இந்தியர்கள் அனைவரையும் நாடு திரும்புமாறு சுஷ்மா ஸ்வராஜ் கேட்டுக் கொண்டுள்ளார்.
 இதுதொடர்பாக சுட்டுரையில் (டுவிட்டர்) அவர் வெள்ளிக்கிழமை வெளியிட்ட பதிவுகளில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
 யேமனில் பயங்கரவாதிகள் வெள்ளிக்கிழமை நடத்திய தாக்குதலில் 4 இந்திய செவிலியர்கள் பலியாகியுள்ளனர். அவர்களை நாடு திரும்பும்படி இந்தியா கேட்டுக் கொண்டிருந்தது. அரசின் வேண்டுகோளை புறக்கணித்துவிட்டு, செவிலியர்கள் 4 பேரும் ஏடனில் தங்கியிருந்தனர்.
 அதுபோன்ற ஆபத்து நிறைந்த நாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் அனைவரும் இந்தியாவுக்கு தயவு செய்து திரும்பி வருமாறு வேண்டுகோள் விடுக்கிறேன் என்று அந்தப் பதிவுகளில் சுஷ்மா ஸ்வராஜ் கேட்டுக் கொண்டுள்ளார்.
 யேமனில் அதிபர் ஆதரவுப் படையினருக்கும், ஈரான் ஆதரவு ஹூதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. இதுபோல், இராக், சிரியா, லிபியா, டுனீஷியா உள்ளிட்ட நாடுகளிலும் உள்நாட்டுச் சண்டை தீவிரமாக நடைபெறுகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments