முகப்பு
இந்தியா

பெண்ணாக மாறிய படை வீரர்: பதவி நீக்கம் செய்யத் தயாராகும் இந்திய கடற்படை!

பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டு பெண்ணாக மாறிய இந்திய கடற்படை வீரர் ஒருவரை, பதவியிருந்து விடுவிக்கும் நடவடிக்கைகளில் இந்திய கடற்படை தற்பொழுது ஈடுபட்டு வருகிறது.

Updated On : 28 ஆகஸ்ட், 2017 at 3:53 PM
பகிர்:
Updated On : 29 ஜனவரி, 2024 at 10:15 PM

விசாகப்பட்டினம்: பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டு பெண்ணாக மாறிய இந்திய கடற்படை வீரர் ஒருவரை, பதவியிருந்து விடுவிக்கும் நடவடிக்கைகளில் இந்திய கடற்படை தற்பொழுது ஈடுபட்டு வருகிறது.

இந்திய கடற்படையின் கிழக்கு ஆணையகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் விசாகப்பட்டினத்தில் ஐ.என்.எஸ் எக்சிலா தளம் இயங்கி வருகிறது. இதன் பொறியியல் பிரிவில் பணியாற்றி வந்த கடற்படை வீரர் ஒருவர், கடந்த சில மாதங்களுக்கு முன்பாக மும்பையில் பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டு பெண்ணாக மாறி விட்டார். இதனைத் தொடர்ந்து கடற்படை விதிகளின் படி பெண் ஒருவருக்கு இத்தகைய பதவிகளை வழங்க இயலாது என்பதால் அவரைப் பணியில் இருந்து விடுவிக்க நடவடிகைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இது தொடர்பாக கடற்படை உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:

Advertisement

விசாகப்பட்டினத்தின் ஐ.என்.எஸ் எக்சிலா தளத்தில் பணியாற்றி வந்த படை வீரர் ஒருவர் கடந்த ஆண்டு இறுதியில், தன்னுடைய சுய விருப்பத்தின் பேரில், மும்பைக்குச் சென்று அங்கு வெளிநபர்கள் சிலர் மூலமாக பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டுள்ளார். அதற்குத் தன்னுடைய சொந்த பணத்தினை செலவழித்துள்ளார்.

பின்னர் பணிக்குத் திரும்பிய அவர் தற்பொழுது சேலைகளை உடுத்துவதுடன் நீண்ட கேசம் வளர்க்கத் துவங்கியுள்ளார். இது இதுவரை கடற்படை  வரலாற்றில் நடக்காத ஒரு விஷயமாகும்.

கடற்படை பணி நடைமுறை விதிகளின் படி பெண்களுக்கு இத்தகைய பணிகள் வழங்கப்படுவதில்லை. எனவே அவரை பணி நீக்கம் செய்வதற்கான நடவடிக்கை எடுக்கும்படி பரிந்துரைக்கப்பட்டு, அதற்கான ஆரம்ப கட்டப்பணிகள் துவங்கப்பட்டுள்ளன.

அதுவரை அவருக்கு இலகுவான அலுவலகப் பணிகள் வழங்கப்படுகின்றன. மேலும் இதுவரை இத்தகைய ஒரு சூழ்நிலையை சந்தித்தது இல்லையென்பதால் பாதுகாப்பு துறை அமைச்சகத்திற்கும் இதுபற்றிய விரிவான தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது

இவ்வாறு அந்த அதிகாரி தெரிவித்தார்.

தற்பொழுது பெண்ணாக மாறியுள்ள அந்த குறிப்பிட்ட வீரருக்கு சிகிச்சைக்கு முன்னரே திருமணம் ஆகியுள்ளது குறிப்பிடத்தக்கது. தற்பொழுது பெண்ணாக மாறி விட்ட காரணத்தினால் பணியில் இருந்து விடுவிக்கப்படுவது குறித்து அவர் திருப்தி தெரிவித்தார்.

முப்படைகளிலும்,போர் முனைகளிலும் பெண்களுக்குஇன்னும் சவாலான பணிகள் கொடுக்கப்பட வேண்டும் என்ற வேண்டுகோள்கள் வலுவடைந்து வரும் நிலையில், இந்த விவகாரம் சர்ச்சையை எழுப்பியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.