FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

மணிப்பூர் போலி என்கவுன்ட்டர்: ராணுவ அதிகாரிக்கு எதிராக சிபிஐ வழக்குப் பதிவு

மணிப்பூரில் பாதுகாப்புப் படையினர் நடத்திய போலி என்கவுன்ட்டரில் 12 வயது சிறுவன் கொல்லப்பட்ட வழக்கில் ராணுவ அதிகாரி மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது.

Updated On : 3 ஆகஸ்ட் 2018, 1:10 am IST
பகிர்:


மணிப்பூரில் பாதுகாப்புப் படையினர் நடத்திய போலி என்கவுன்ட்டரில் 12 வயது சிறுவன் கொல்லப்பட்ட வழக்கில் ராணுவ அதிகாரி மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது.
கடந்த 2009 மார்ச் 4-ஆம் தேதி சிறுவன் ஆஸாத் கான் கொல்லப்பட்ட இந்த வழக்கில், ராணுவ மேஜர் விஜய் சிங் பல்ஹாரா மீது தற்போது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மணிப்பூர் மாநிலத்தில் பாதுகாப்புப் படையினர் நடத்திய போலி என்கவுன்ட்டரில் 86 பேர் கொல்லப்பட்டதாக 41 வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளன. அந்த வழக்குகளின் விசாரணையை உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு ஜூலையில் சிபிஐ வசம் ஒப்படைத்தது. அவற்றில் 29 வழக்குகளில் சிபிஐ முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளது. இதில், ராணுவ அதிகாரி ஒருவர் மீது வழக்குப் பதிவு செய்யப்படுவது இது முதல் முறையாகும்.
முன்னதாக, சிறுவன் ஆஸாத் கான் கொல்லப்பட்டது போலி என்கவுன்ட்டர்' விவகாரம் என உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட முன்னாள் நீதிபதி சந்தோஷ் ஹெக்டே தலைமையிலான விசாரணை ஆணையம் கூறியிருந்தது. 
இந்த வழக்கு தொடர்பாக அந்த ஆணையம், உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பித்த அறிக்கையில் கூறப்பட்டிருந்ததாவது:
ஆஸாத் கான் குடும்பத்தினர் அளித்த தகவலின்படி, சம்பவத்தன்று பாதுகாப்புப் படையினர் ஆஸாத்தை வீட்டிலிருந்து அருகே உள்ள காலியிடத்துக்கு இழுத்துச் சென்று அங்கு வைத்து சரமாரியாகத் தாக்கியுள்ளனர். பின்னர் கமாண்டோ வீரர் ஒருவர் ஆஸாத் கானை சுட்டுள்ளார்.
பாதுகாப்புப் படையினர் தரப்பு தகவலின்படி, மக்கள் ஐக்கிய விடுதலை முன்னணி என்ற அமைப்பின் உறுப்பினராக ஆஸாத் கான் சந்தேகிக்கப்பட்டுள்ளார். அந்த அமைப்பை தடைசெய்யப்பட்ட ஒன்றாக மணிப்பூர் அரசு அறிவித்திருக்கவில்லை. ஆஸாத் கானின் கிராமத்தில் பயங்கரவாதிகளின் நடமாட்டம் இருப்பதாக அறிந்து பாதுகாப்புப் படை அங்கு சென்றுள்ளது.
அப்போது 2 நபர்கள் பாதுகாப்புப் படையினரை நோக்கி சுட்டதையடுத்து, இருதரப்புக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை ஏற்பட்டது. அதன் இறுதியில் ஆஸாத் கானின் சடலம் தோட்டா காயத்துடன் மீட்கப்பட்டது என பாதுகாப்புப் படையினர் வாக்குமூலத்தில் உள்ளது. 
அந்த என்கவுன்ட்டருக்கு தலைமை வகித்த ராணுவ அதிகாரி விஜய் சிங்கின் வாக்குமூலம் முரண்பட்டதாக உள்ளது என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments