2 ஜி: சிபிஐ மேல்முறையீட்டு வழக்கு விசாரணை அக்.9-க்கு ஒத்திவைப்பு
2 ஜி வழக்கில் தொடர்புடைய சிபிஐ மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையை தில்லி உயர் நீதிமன்றம் அக்டோபர் 9-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.
2 ஜி வழக்கில் தொடர்புடைய சிபிஐ மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையை தில்லி உயர் நீதிமன்றம் அக்டோபர் 9-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.
2ஜி முறைகேடு வழக்கில் ஆ.ராசா, கனிமொழி, எஸ்ஸார் குழும மேம்பாட்டாளர்கள் ரவி காந்த் ருய்யா, அன்ஷுமன் ருய்யா, லூப் டெலிகாம் மேம்பாட்டாளர்கள் கிரண் கேதான், அவரது கணவர் ஐ.பி. கேதான், எஸ்ஸார் குழும உத்திகள் திட்டமிடல் பிரிவு இயக்குநர் விகாஸ் சரஃப் உள்ளிட்ட குற்றம்சாட்டப்பட்டோரை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் விடுதலை செய்ததற்கு எதிராக தில்லி உயர் நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை, சிபிஐ ஆகியவை சார்பில் மேல்முறையீட்டு மனுக்கள் கடந்த மார்ச் மாத இறுதியில் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த இரண்டு மனுக்களும் தில்லி உயர் நீதிமன்றத்தில் கடந்த மார்ச் 21-ஆம் தேதி விசாரணைக்கு வந்த போது, இதுதொடர்பாக முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, மாநிலங்களவை திமுக உறுப்பினர் கனிமொழி உள்ளிட்ட குற்றம்சாட்டப்பட்டவர்கள் இரண்டு வாரங்களுக்குள் பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடப்பட்டது. மேலும், வழக்கு விசாரணை மே 25-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில், இந்த மனுக்கள் தில்லி உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.பி. கர்க் அமர்வு முன் கடந்த மே 24-ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது, அமலாக்கத் துறை, சிபிஐ ஆகியவை சார்பில் வழக்குரைஞர் துஷார் மேத்தா ஆஜராகி, 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் ஏற்பட்ட முறைகேட்டால் அரசுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டது. மேலும், 2ஜி வழக்கு நாட்டுக்கு மிகப்பெரிய இழப்பை உருவாக்கியிருப்பதுடன், களங்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது. வழக்கு விசாரணையை தாமதப்படுத்தும் உத்தியை எதிர்மனுதாரர்கள் கையாண்டு வருகின்றனர்' என்றார்.
இரு தரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட நீதிபதி எஸ்.பி. கர்க், பதில் அளிக்க எதிர் மனுதாரர்களுக்கு அவகாசம் அளித்து சிபிஐ சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையை ஆகஸ்ட் 2-ஆம் தேதிக்கு ஒத்திவைத்திருந்தார்.
இந்நிலையில், சிபிஐயின் மேல்முறையீட்டு மனு உயர் நீதிமன்ற நீதிபதி நாஜ்மி வஜீரி அமர்வில் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்ததது. அப்போது, சிபிஐ தரப்பில் ஆஜரான வழக்குரைஞர், இந்த வழக்கில் சில நிறுவனங்கள் சார்பில் பதில் அளிக்கப்பட்டுள்ளது குறித்து நீதிமன்றத்தில் பதிவு செய்யப்படவில்லை' என்றார்.
இந்த வழக்கில் குற்றம்சாட்டுப்பட்டுள்ள எஸ்ஸார் குழும மேம்பாட்டாளர்கள் ரவி காந்த் ருய்யா ஆகியோர் சார்பில் ஆஜரான வழக்குரைஞர் தயான் கிருஷ்ணன், இந்த வழக்கில் பதில் அளிக்க கால அவகாசம் வேண்டும்' எனக் கேட்டுக் கொண்டனர். அவரது கோரிக்கையை ஏற்றுக் கொண்ட நீதிபதி, பதில் அளிக்க 4 வாரம் அவகாசம் அளித்ததுடன், வழக்கு விசாரணையை அக்டோபர் 9-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
இதற்கிடையே, 2ஜி வழக்கில் அமலாக்கத் துறை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு ஆகஸ்ட் 6-ஆம் தேதியும் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, மாநிலங்களவை திமுக உறுப்பினர் கனிமொழி ஆகியோருக்கு எதிரான சிபிஐ வழக்கு விசாரணை ஆகஸ்ட் 10-ஆம் தேதியும் நடைபெறவுள்ளன.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.