கேரளத்தில் பலத்த மழை: மீட்புப் பணிக்காக தேசிய பேரிடர் மீட்புப் படை விரைவு
கேரள மாநிலத்தில் கனமழை தொடர்ந்து பெய்து வருவதால், மீட்புப் பணிகளுக்காக தேசிய பேரிடர் மீட்புப் படையினர் அரக்கோணத்தில் இருந்து விமானத்தில் விரைந்தனர்.
கேரள மாநிலத்தில் கனமழை தொடர்ந்து பெய்து வருவதால், மீட்புப் பணிகளுக்காக தேசிய பேரிடர் மீட்புப் படையினர் அரக்கோணத்தில் இருந்து விமானத்தில் விரைந்தனர்.
தென்மேற்கு பருவ மழையின் தாக்கம் வியாழக்கிழமை அதிகாலை அதிகரித்ததைத் தொடர்ந்து, கேரள மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. பல இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டதால் பாதிப்புகள் அதிக அளவில் ஏற்பட்டன. கேரள மாநில அரசின் தகவல்படி இடுக்கி மாவட்டத்தில் ஆதிலி நகரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உள்ளிட்ட 10 பேர் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தனர். இந்த மழை மேலும் 2 நாள்களுக்கு நீடிக்கலாம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதையடுத்து கேரள மாநில அரசு, அரக்கோணம் அருகே உள்ள தேசிய பேரிடர் மீட்புப் படை தளத்தில் இருந்து மீட்புப் பணிகளுக்கு ஆட்களை விரைந்து அனுப்புமாறு கேட்டுக்கொண்டது.
அதன்பேரில் படையின் உயர்நிலை கமாண்டண்ட் ரேகா நம்பியார் உத்தரவின் பேரில், உதவி கமாண்டண்ட் ராஜன்பாலு தலைமையில் தலா 30 பேரை கொண்ட இரு குழுக்கள் பேருந்துகளில் கேரளத்துக்குப் புறப்பட்டன. இவர்கள் புறப்பட்ட நிலையில், உடனடியாக ஆட்கள் தேவை என கேரளத்தில் இருந்து தகவல் வந்ததும், தலா 25 பேரை கொண்ட இரு குழுக்கள் அரக்கோணம் ஐஎன்எஸ் ராஜாளி கடற்படை விமானதளத்தில் இருந்து உடனடியாக கடற்படை விமானம் மூலம் கொச்சி விமான நிலையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து, 2 மணிநேரத்துக்குப் பிறகு மற்றொரு விமானத்தில் மேலும் தலா 25 பேரை கொண்ட இரு குழுக்கள் கொச்சிக்கு புறப்பட்டன. இக்குழுக்கள் தனித்தனியாக இடுக்கி, பாலக்காடு, வயநாடு, கோழிக்கோடு மாவட்டங்களுக்கு சென்று அங்கு மீட்புப் பணியில் ஈடுபட உள்ளனர்.
மீட்புப் படையினர்களுடன் மருத்துவக் குழுவினரும் அவசர கால அதிநவீன மருத்துவ உபகரணங்களுடன் சென்றுள்ளனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.