பயங்கரவாத செயல்களுக்கு நிதி பரிமாற்றம்: பயங்கரவாதி சையது சலாஹுதின் மகன் கைது
பயங்கரவாத செயல்களுக்காக நிதி பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக பயங்கரவாதி சையது சலாஹுதினின் மகன் சையது ஷகீல் யூசஃபை தேசியப் புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) அதிகாரிகள் கைது செய்தனர்.
ஸ்ரீநகர்: பயங்கரவாத செயல்களுக்காக நிதி பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக பயங்கரவாதி சையது சலாஹுதினின் மகன் சையது ஷகீல் யூசஃபை தேசியப் புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) அதிகாரிகள் கைது செய்தனர்.
இதுகுறித்து என்ஐஏ செய்தித்தொடர்பாளர் கூறியதாவது:
ஸ்ரீநகரில் உள்ள அரசு மருத்துமனையில் ஆய்வக உதவியாளராக சையது ஷகீல் பணிபுரிந்து வந்தார். ராம்பக் பகுதியில் வசித்துவந்த அவரை என்ஐஏ அதிகாரிகள் வியாழக்கிழமை கைது செய்தனர்.
பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதிப் பரிமாற்றம் செய்ய வெளிநாட்டில் உள்ள தந்தையும், சர்வதேச அளவில் தேடப்பட்டுவரும் பயங்கரவாதியுமான சையது சலாஹுதினிடம் இருந்து சட்டவிரோதமாக நிதியைப் பெற்றது தொடர்பான வழக்கில் ஷகீல் கைது செய்யப்பட்டுள்ளார் என்று அந்தச் செய்தித்தொடர்பாளர் தெரிவித்தார்.
இதே வழக்கில், சலாஹுதினின் முதல் மகன் ஷாகித்தும் ஏற்கெனவே கைது செய்யப்பட்டார். இவர், ஜம்மு-காஷ்மீர் வேளாண் துறையில் பணிபுரிந்து வந்தார்.
பாகிஸ்தானிலிருந்து தில்லி வழியாக ஹவாலா முறையில் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதி அளிக்க நிதி பரிமாற்றம் செய்யப்பட்டதாக கடந்த 2011-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் என்ஐஏ வழக்குப் பதிவு செய்தது.
பிரிவினைவாதி சையது அலி ஷா கிலானிக்கு நெருக்கமான ஜி.எம்.பட், முகமது சித்திக் கனாய், குலாம் ஜிலானி லிலூ, ஃபரூக் அகமது தக்கா உள்பட 6 பேருக்கு எதிராக என்ஐஏ இதுவரை 2 குற்றப்பத்திரிகைகளை தாக்கல் செய்துள்ளது. இந்த 4 பேரும் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். குற்றப்பத்திரிகையில் இடம்பெற்றுள்ள முகமது மக்பூல் பண்டிட், பட் ஆகியோர் தலைமறைவாகி விட்டனர். அவர்களுக்கு எதிராக ரெட் கார்னர் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதுதவிர, 2011-ஆம் ஆண்டு நவம்பர் மாதமும், இந்த ஆண்டு மே மாதமும் பயங்கரவாத அமைப்பிடம் இருந்து நிதி பெற்றதாக 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. சையது அலி ஷா கிலானியின் உறவினர்கள் உள்பட 10 பேரை என்ஐஏ அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
காஷ்மீர் பள்ளத்தாக்கில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு: இதனிடையே, காஷ்மீர் பள்ளத்தாக்குப் பகுதியில் பிரிவினைவாதிகள் வியாழக்கிழமை முழு அடைப்புப் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்ததால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், "காஷ்மீர் பள்ளதாக்குப் பகுதியில் கடைகள், வர்த்தக நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் ஆகியவை மூடப்பட்டுள்ளன. வாகனங்கள் எதுவும் இயக்கப்படவில்லை. எந்தவித அசம்பாவிதச் சம்பவமும் ஏற்படவில்லை' என்று தெரிவித்தனர்.
ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 35-ஏ பிரிவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள பொதுநல மனு மீது உச்ச நீதிமன்றத்தில் 31-ஆம் தேதி விசாரணை நடைபெறவுள்ள நிலையில், 2 நாள் முழு அடைப்புப் போராட்டத்துக்கு பிரிவினைவாதிகள் அழைப்பு விடுத்துள்ளனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.