காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டத்திற்கு எதிரான வழக்கு: வரும் ஜனவரிக்கு ஒத்தி வைப்பு
காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டத்திற்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கினை அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்திற்கு உச்சநீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது.
புது தில்லி: காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டத்திற்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கினை அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்திற்கு உச்சநீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது.
காஷ்மீர் மாநில மக்களுக்கு சிறப்பு சலுகைகள் வழங்கும் அரசியல் சட்டப்பிரிவு 35-ஏக்கு எதிராக தில்லியைச் சேர்ந்த 'வீ சிட்டிசன்' என்ற அரசு சாரா அமைப்பு ஒன்று உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்துள்ளது. ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு அரசியல் சட்டப்பிரிவு 35-ஏ மற்றும் 370-இன் கீழ், சுயாட்சி அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது என்பது, நாட்டின் மற்ற பகுதிகளுக்கு பாகுபாடு காட்டும் வகையில் அமைந்திருப்பதாக அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே காஷ்மீருக்கு சிறப்பு சலுகைகள் வழங்கும் சட்டப்பிரிவை நீக்கக் கோரி பா.ஜ.கவின் மூத்த தலைவர்களிலொருவரும், வழக்கறிஞருமான அஷ்வின் உபாத்யாய் புதிதாக ஒரு மனுவினை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.
Advertisement
Advertisement
பிரதான வழக்கின் விசாரணை இன்று நடக்கவிருந்த நிலையில், இந்த வழக்கும் சேர்த்து உச்ச நீதிமன்றத்தில் வெள்ளியன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்திற்கு வழக்கு ஒத்தி வைக்கப்படுவதாக உத்தரவிட்டது.
அதேசமயம் உச்சநீதிமன்றம் இந்த வழக்குகளை விசாரிப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பிரிவினைவாத கட்சிகளின் தலைவர் ஜம்மு காஷ்மீர் மாநிலம் முழுவதும் கடையடைப்பு மற்றும் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர். இதன் காரணமாக காஷ்மீர் மாநிலம் முழுவதும் கடைகள், வர்த்தக நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் ஆகியவை அடைக்கப்பட்டுள்ளது. சாலைப் போக்குவரத்து முழுமையாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீர்ல் பல மாவட்டங்களில் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ள நிலையில், மாநிலத்தில் செயல்படும் பல்வேறு பிரிவினைவாத அமைப்புகளின் தலைவர்கள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.