முகப்பு
இந்தியா

பாஜகவில் சேர்ந்தார்  'காதல் ஜிகாத்' சர்ச்சை மூலம் அகில இந்திய புகழ்பெற்ற ஹாதியாவின் தந்தை 

'காதல் ஜிகாத்' சர்ச்சை மூலம் அகில இந்திய புகழ்பெற்ற ஹாதியாவின் தந்தை செவ்வாயன்று  பாஜகவில் சேர்ந்தார் 

Updated On : 18 டிசம்பர் 2018, 4:01 pm IST
பகிர்:

திருவனந்தபுரம்: 'காதல் ஜிகாத்' சர்ச்சை மூலம் அகில இந்திய புகழ்பெற்ற ஹாதியாவின் தந்தை செவ்வாயன்று  பாஜகவில் சேர்ந்தார் 

கேரள மாநிலம், வைக்கம் மாவட்டத்தைச் சேர்ந்த அகிலா  என்ற பெண், ஷஃபீன் ஜஹான் என்ற முஸ்லிம் இளைஞரை இஸ்லாதுக்கு மதம் மாறி திருமணம் செய்து கொண்டார். மேலும், அவர் தனது பெயரை ஹாதியா என்றும் மாற்றிக் கொண்டார்.

இந்நிலையில், தனது மகளை மூளைச்சலவை செய்து, மதம் மாற்றி திருமணம் செய்து கொண்டதாகக் கூறி, அந்தப் பெண்ணின் தந்தை கேரள உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். அந்த மனுவை விசாரித்த கேரள உயர் நீதிமன்றம், அந்தத் திருமணம் செல்லாது என்று அறிவித்தது. 

Advertisement

அதை எதிர்த்து, அந்தப் பெண்ணின் கணவர் ஜஹான், உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், அந்தப் பெண்ணின் ஒப்புதலின்படியே திருமணம் நடைபெற்றுள்ளதா என்பதை அறிய, தேசியப் புலனாய்வு அமைப்பின் (என்ஐஏ) விசாரணைக்கு உத்தரவிட்டிருந்தது. அதையடுத்து என்ஐஏ விசாரணைக்கு தடை கோரி, அந்தப் பெண்ணின் கணவர் மனு தாக்கல் செய்தார்.

இந்த விவகாரத்தை விசாரித்த என்ஐஏ அமைப்பு, அந்தப் பெண்ணை, ஜஹான் மூளைச்சலவை செய்து, சிரியாவில் செயல்பட்டு வரும் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பில் சேர்த்து விட்டதாக நீதிமன்றத்தில் தெரிவித்தது.

இந்நிலையில், அந்தப் பெண்ணின் விருப்பப்படியே திருமணம் நடைபெற்றதா என்பதை அறிவதற்கு அவரை நேரில் ஆஜர்படுத்துமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி, அப்போது தனது பெற்றோர் வீட்டில் தங்கியிருந்த ஹாதியா, உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.எம்.கான்வில்கர், டி.ஒய்.சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் ஆஜர்படுத்தப்பட்டார்.

2 மணி நேரத்துக்கும் மேலாக நீடித்த விசாரணையின்போது, அந்தப் பெண் தனது கணவருடனே செல்வதற்கு விருப்பம் தெரிவித்தார். அதைத் தொடர்ந்து, அந்தப் பெண் தமிழகத்தில் கல்வியைத் தொடருமாறு நீதிபதிகள் அனுப்பி வைத்தனர். வழக்கில் அடுத்த விசாரணை, 2019-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் மூன்றாவது வாரத்துக்கு ஒத்திவைக்கப்பட்டது.

தமிழ்நாட்டின் சேலம் நகருக்கு வந்து கல்லூரியில் சேர்ந்த அந்தப் பெண்ணுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் கேரள காவல் துறைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. மேலும், அந்தப் பெண் பயிலும் சேலம் நகரில் உள்ள அந்த தனியார் ஹோமியோபதி மருத்துவக் கல்லூரியின் தலைவரை, பாதுகாவலராக நியமித்தும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் 'காதல் ஜிகாத்' சர்ச்சை மூலம் அகில இந்திய புகழ்பெற்ற ஹாதியாவின் தந்தை அசோகன் செவ்வாயன்று  பாஜகவில் சேர்ந்தார் 

திருவனந்தபுரத்தில் பாஜக மாநில பொதுச் செயலாளர் கோபால கிருஷ்ணன் முன்னிலையில் பாஜகவில் அவர் சேர்ந்தார் 

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது:

நான் சிறு வயது முதலே கம்யூனிஸ்ட் கட்சியின் ஆதரவாளன். ஆனால் தற்போது அந்த கட்சியானது சிறுபான்மையினர் வாக்குகளை குறி வைத்து கீழ்த்தரமான அரசியலில் ஈடுபட்டு வருகிறது. மதம் தொடர்பான விவகாரங்களில் நீதிமன்றம் தலையிடுவதை நான் விரும்பவில்லை. சபரிமலை விவகாரத்தில் பாஜக நிலைப்பாட்டை நான் ஆதரிக்கிறேன்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.