FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

காஷ்மீர்: அமர்நாத் யாத்திரை நாளை தொடக்கம்: 40,000 பாதுகாப்புப் படையினர் குவிப்பு

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் பலத்த பாதுகாப்புக்கு இடையே அமர்நாத் யாத்திரை வியாழக்கிழமை (ஜூன் 28) தொடங்குகிறது

Updated On : 27 ஜூன் 2018, 1:35 am IST
அமர்நாத் யாத்திரை வரும் வியாழக்கிழமை தொடங்குவதையொட்டி, ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ள பாதுகாப்புப் படை வீரர்கள்.
பகிர்:

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் பலத்த பாதுகாப்புக்கு இடையே அமர்நாத் யாத்திரை வியாழக்கிழமை (ஜூன் 28) தொடங்குகிறது. இதையொட்டி, மாநில போலீஸார், துணை ராணுவத்தினர் உள்பட 40,000 வீரர்கள், பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இமயமலையில் உள்ள குகைக்கோயிலில் இருக்கும் பனிலிங்கத்தை ஆண்டுதோறும் பக்தர்கள் யாத்திரையாக சென்று தரிசிப்பது வழக்கம். இந்த யாத்திரை அமர்நாத் யாத்திரை என்று அழைக்கப்படுகிறது. இந்த யாத்திரைக்கு நிகழாண்டில் இதுவரையிலும் 2.11 லட்சம் பேர் தங்களது பெயர்களை பதிவு செய்துள்ளனர்.
இந்நிலையில், நிகழாண்டுக்கான அமர்நாத் யாத்திரை பலத்த பாதுகாப்புக்கு இடையே வரும் வியாழக்கிழமை தொடங்குகிறது. இதையொட்டி, ஜம்முவின் பகவதிநகர் முகாமில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வந்துள்ள யாத்ரீகர்கள் தங்கியுள்ளனர். அவர்களில் முதல்கட்டமாக சில யாத்ரீகர்கள், அந்த முகாமில் இருந்து காஷ்மீரின் பல்டால், பகல்காம் ஆகிய இடங்களில் உள்ள முகாம்களுக்கு வாகனங்களில் புதன்கிழமை காலை புறப்பட்டுச் செல்கின்றனர். அவர்கள் அனைவரும் புதன்கிழமை மாலையில், அந்த முகாம்களுக்கு சென்றடைவர்.
இதன்பின்னர் அந்த முகாம்களில் அவர்கள் ஓய்வெடுப்பர். இதையடுத்து, அங்கிருந்து 3,800 மீட்டர் உயரத்தில் இருக்கும் குகைக்கோயிலுக்கு வியாழக்கிழமை காலை புறப்பட்டுச் செல்வர். மலைப்பகுதியில் அவர்கள் அனைவரும் கால் நடையாக நடந்து செல்வர். இந்த யாத்திரை, ஆகஸ்ட் மாதம் 26ஆம் தேதியுடன் நிறைவடையவுள்ளது.
அமர்நாத் யாத்திரையை சீர்குலைக்க பயங்கரவாதிகள் சதித் திட்டம் தீட்டியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுவதால், பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. அமர்நாத் யாத்ரீகர்கள் பயணிக்கும் அனைத்து வாகனங்களும் ரேடியோ ஒலி அலைகள் மூலம் இணைக்கப்பட்டுள்ளன. அமர்நாத் யாத்திரை செல்லும் அனைவரும் தகவல் தொடர்பு வசதி பெற்றிருப்பதை உறுதி செய்யும் வகையில், அவர்களுக்கு அளிக்கப்பட்டுள்ள தற்காலிக சிம்கார்டுகள் செயல்படும் நாள்கள் 7லிருந்து 10 நாள்களாக உயர்த்தப்பட்டுள்ளது. அமர்நாத் யாத்திரையை முன்னிட்டு, ஜம்மு-காஷ்மீர் போலீஸார், துணை ராணுவத்தினர், தேசிய பேரிடர் மீட்புப் படையினர், ராணுவத்தினர் என்று மொத்தம் 40 ஆயிரம் பேர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஜம்மு நகர காவல்துறை ஐ.ஜி. எஸ்.டி. சிங் கூறுகையில், அமர்நாத் யாத்திரை அமைதியாகவும், எளிதாகவும் நடைபெறுவதை உறுதி செய்யத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. 
தேச விரோத சக்திகளின் சதித் திட்டங்களை முறியடிக்க பாதுகாப்பு படைகள் தயாராக உள்ளன' என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments