நாட்டில் கடந்த 4 ஆண்டுகளாக அறிவிக்கப்படாத நெருக்கடி நிலை
நமது நாடு கடந்த 4 ஆண்டுகளாக அறிவிக்கப்படாத நெருக்கடி நிலையை எதிர்கொண்டு வருவதாக பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி விமர்சித்தார்.
நமது நாடு கடந்த 4 ஆண்டுகளாக அறிவிக்கப்படாத நெருக்கடி நிலையை எதிர்கொண்டு வருவதாக பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி விமர்சித்தார்.
இதுதொடர்பாக அவர் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: மத்தியிலும், பல்வேறு மாநிலங்களிலும் உள்ள பாஜக அரசுகளின் அணுகுமுறை, ஏழைகள், விவசாயிகள், தொழிலாளர்கள், தலித்துகளுக்கு எதிராகவே உள்ளது. பாஜகவின் ஆட்சியில் சமூகத்தில் பின்தங்கியவர்கள் தொடர்ந்து துன்புறுத்தல்களுக்கு ஆளாகி வருகின்றனர். எனவே, பின்தங்கியவர்களின் நலன் குறித்து பேசும் தார்மீக உரிமையை பாஜக இழந்துவிட்டது. நமது நாடு கடந்த 4 ஆண்டுகளாகவே அறிவிக்கப்படாத நெருக்கடி நிலையை எதிர்கொண்டு வருகிறது. பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் நிதி நெருக்கடியும் நாட்டில் ஏற்பட்டுள்ளது.
இதனால், நாட்டு மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகியுள்ளனர்.
தேசப்பற்றில் தாங்களே உயர்ந்தவர்கள் என்று பாஜக கூறிக் கொள்கிறது. தங்களது மக்கள் விரோத கொள்கைகளை மறைக்கவே தேசப்பற்று வேடத்தை பாஜக அணிகிறது. நாட்டில் நிலவும் வறுமை, வேலைவாய்ப்பின்மை, பணவீக்கம் ஆகிய பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதன் மூலம் பிரதமர் மோடியும் பாஜகவினரும் தங்களது தேசப்பற்றை நிரூபிக்க வேண்டும்.
வெறுப்புணர்வை தூண்டும் வகையிலும், பத்திரிகையாளர்களை பகிரங்கமாக அச்சுறுத்தும் வகையிலும் பாஜக தலைவர்கள் தொடர்ந்து பேசி வருகின்றனர். இடஒதுக்கீட்டு முறையை செயலற்றதாக மாற்றுவதற்கான மறைமுக முயற்சிகளில் பாஜக ஈடுபட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, தனியார் துறையை பெரிய அளவில் ஊக்குவிக்கும் நடவடிக்கைகளை பாஜக அரசு மேற்கொண்டுள்ளது என்று அந்த அறிக்கையில் மாயாவதி தெரிவித்துள்ளார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.