கேமராவில் சிக்கிய காட்சி: கமல்நாத்துக்கு ஷூ அணிவித்து விடும் காங்கிரஸ் எம்எல்ஏ
மத்தியப் பிரதேச காங்கிரஸ் கட்சியின் தலைவர் கமல்நாத்தின் ஷூலேஸை அம்மாநில எம்எல்ஏ ராஜ்நீஷ் சிங் கட்டி விடும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி சர்ச்சையை எழுப்பியுள்ளது.
ஷியோனி: மத்தியப் பிரதேச காங்கிரஸ் கட்சியின் தலைவர் கமல்நாத்தின் ஷூலேஸை அம்மாநில எம்எல்ஏ ராஜ்நீஷ் சிங் கட்டி விடும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி சர்ச்சையை எழுப்பியுள்ளது.
ஹிமாச்சலப் பிரதேச முன்னாள் ஆளுநர் மற்றும் காங்கிரஸ் தலைவர் ஊர்மிளா சிங்குக்கு இறுதி மரியாதை செலுத்திய பிறகு வெளியே வந்த கமல்நாத்தின் ஷூ லேஸை, ராஜ்நீஷ் சிங் போட்டு விடும் காட்சிகள் சமூக தளங்களில் வேகமாகப் பரவியது.
சியோனியில் நடைபெற்ற இந்த சம்பவம் பலரது புருவத்தையும் உயர்த்துவதாக இருந்தாலும், கட்சியின் தலைவருக்கு மரியாதை செய்யும் விதத்திலே தான் இதை செய்ததாக எம்எல்ஏ கூறியுள்ளார்.
Advertisement
இது குறித்து சிங் கூறுகையில், அவர் (கமல்நாத்) எனக்கு தந்தையைப் போன்றவர். அவர் மீது எனக்கு அதீத மரியாதை உள்ளது. நான் பள்ளியில் படிக்கும் காலத்தில் இருந்தே அவரது கால்களைத் தொட்டு மரியாதை செலுத்தி ஆசிகளைப் பெற்று வருகிறேன். அவர் எனது குடும்பத்தாருக்கும், குறிப்பாக தந்தைக்கும் மிகவும் நெருக்கமானவர் என்று ஏஎன்ஐக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் ஊடகங்கள் மூலமாக, பொதுமக்களுக்கு தவறாக புரியவைக்கப்படுகிறது என்றும் அவர் கூறுகிறார்.
முன்னாள் ஆளுநர் ஊர்மிளா சிங்குக்கு இறுதி மரியாதை செலுத்திவிட்டு வெளியே வந்த இடத்தில் ஏராளமானோர் இருந்தார்கள். அவ்விடத்தில் கமல்நாத் தனது காலணியை தேடுவதற்கு சிரமப்பட்டார். அதனால், அதை தேடி எடுத்துக் கொண்டு வந்து கொடுத்து, அவர் காலணியை அணிய உதவி செய்தேன் அவ்வளவுதான் என்கிறார்.