சுஜாத் புகாரி கொலை வழக்கு: 4 சந்தேக நபர்களின் புகைப்படங்கள் வெளியீடு
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் பத்திரிகை ஆசிரியர் சுஜாத் புகாரியை பயங்கரவாதிகள் சுட்டுக் கொன்ற வழக்கில், சந்தேக நபர்கள் 4 பேரின் புகைப்படங்களை அந்த மாநில காவல் துறை வியாழக்கிழமை வெளியிட்டது
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் பத்திரிகை ஆசிரியர் சுஜாத் புகாரியை பயங்கரவாதிகள் சுட்டுக் கொன்ற வழக்கில், சந்தேக நபர்கள் 4 பேரின் புகைப்படங்களை அந்த மாநில காவல் துறை வியாழக்கிழமை வெளியிட்டது.
ரைஸிங் காஷ்மீர்' என்ற பத்திரிகை ஆசிரியர் சுஜாத் புகாரியை கடந்த 14-ஆம் தேதி பயங்கரவாதிகள் கண்மூடித்தனமாக சுட்டுக் கொன்றனர்.
இந்தப் படுகொலை சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. காவல் துறை வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறது.
இதுகுறித்து காஷ்மீர் மண்டல காவல் துறை ஐஜியான ஸ்வயம் பிரகாஷ் பானி, செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது:
சுஜாத் புகாரியை கொல்வதற்கு பாகிஸ்தானில் சதித்திட்டம் தீட்டப்பட்டது. லஷ்கர்-ஏ-தொய்பா அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதிகள் சதித்திட்டத்தை தீட்டியிருக்கிறது. இங்கிருந்து 3 பயங்கரவாதிகள் அந்தத் திட்டத்தை செயல்படுத்தினர்.
அனந்த்நாக் மாவட்டத்தைச் சேர்ந்த முஸாஃபர் அகமது பட், ஆஸாத் அகமது மாலிக், ஸ்ரீநகரைச் சேர்ந்த சஜத் குல், பாகிஸ்தானைச் சேர்ந்த நவீத் ஜட் ஆகியோர் சந்தேக நபர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். சஜத் குல் தற்போது பாகிஸ்தானில் உள்ளார். போலீஸ் காவலில் இருந்து நவீத் ஜட் கடந்த பிப்ரவரி மாதம் தப்பி ஓடினார். 4 பேருக்கு எதிராக போதிய ஆதாரங்கள் உள்ளன.
இதுதொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. பயங்கரவாதிகளைத் தேடி வருகிறோம்.
பாகிஸ்தானுக்கு தப்பி ஓடிய சஜத் குல், 2003-ஆம் ஆண்டில் தில்லியில் கைது செய்யப்பட்டார். அதன்பிறகு, 2016-ஆம் ஆண்டு ஸ்ரீநகரில் மீண்டும் கைது செய்யப்பட்டார். கடந்த ஆண்டு மார்ச் மாதம் போலி கடவுச்சீட்டு மூலம் அவர் பாகிஸ்தானுக்கு தப்பி ஓடிவிட்டார். அவரைக் கைது செய்ய சர்வதேச போலீஸாரின் உதவியை நாட முடிவு செய்திருக்கிறோம் என்று ஸ்வயம் பிரகாஷ் பானி தெரிவித்தார்.
சுஜாத் புகாரி கொலை வழக்கை சிறப்பு விசாரணைக் குழு விசாரித்து வருகிறது.
இந்தக் கொலையை தாங்கள் செய்யவில்லை என்று லஷ்கர்-ஏ-தொய்பா அமைப்பு தெரிவித்துள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.