மகன் திருமணம்: லாலுவுக்கு 5 நாள் பரோல்
கால்நடை தீவன ஊழல் வழக்கில் சிறை தண்டனை அனுபவித்துவரும் ராஷ்ட்ரீய ஜனதா தளம் (ஆர்ஜேடி) கட்சியின் தலைவர் லாலு பிரசாத்துக்கு, மகன் தேஜ் பிரதாப் யாதவின் திருமண நிகழ்வில் பங்கேற்பதற்காக
கால்நடை தீவன ஊழல் வழக்கில் சிறை தண்டனை அனுபவித்துவரும் ராஷ்ட்ரீய ஜனதா தளம் (ஆர்ஜேடி) கட்சியின் தலைவர் லாலு பிரசாத்துக்கு, மகன் தேஜ் பிரதாப் யாதவின் திருமண நிகழ்வில் பங்கேற்பதற்காக 5 நாள் பரோல் வழங்கப்பட்டுள்ளது.
பிகார் எம்எல்ஏவும், அந்த மாநில முன்னாள் அமைச்சருமான தேஜ் பிரதாப் யாதவ், ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியின் மூத்த தலைவர் சந்திரிகா ராயின் மகள் ஐஸ்வர்யா ராயை திருமணம் செய்து கொள்ளவுள்ளார்.
இவர்களின் திருமணம் வரும் 12-ஆம் தேதி பிகார் தலைநகர் பாட்னாவில் நடைபெறவுள்ளது. கடந்த மாதம் நடைபெற்ற இவர்களின் நிச்சயதார்த்த நிகழ்விலும் லாலுவால் பங்கேற்க இயலவில்லை. இந்நிலையில், திருமணத்தில் பங்கேற்பதற்கு 5 நாள் பரோல் கோரி அவரது சார்பில் விண்ணப்பிக்கப்பட்டிருந்தது. அவருக்கு 10-ஆம் தேதி முதல் 14-ஆம் தேதி வரை பரோலில் செல்ல புதன்கிழமை அனுமதி அளிக்கப்பட்டது.
இதையடுத்து, அவர் ராஞ்சி சிறையிலிருந்து புதன்கிழமை மாலை விடுவிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அங்கிருந்து பாட்னாவுக்கு அவரை ஹெலிகாப்டரில் அழைத்துச் செல்ல கட்சியினர் திட்டமிட்டு வருகின்றனர்.
சிபிஐக்கு நீதிமன்றம் அனுமதி: இதனிடையே, ரயில்வே ஹோட்டல்கள் ஒதுக்கீட்டில் முறைகேடு நடைபெற்றதாக எழுந்துள்ள குற்றசாட்டில் லாலு பிரசாத், அவரது மனைவி ராப்ரி தேவி, மகன் தேஜஸ்வி யாதவ் உள்ளிட்டோருக்கு எதிராக அடுத்தகட்ட நடவடிக்கை மேற்கொள்ள 3 வாரங்கள் வரை சிபிஐ அதிகாரிகளுக்கு தில்லி உயர் நீதிமன்றம் கால அவகாசம் அளித்தது. இந்த வழக்கில் அவர்களுக்கு எதிராக ஏற்கெனவே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.