5 ஆண்டுகளுக்கும் குமாரசாமி முதல்வராக இருப்பது குறித்து பேசப்படவில்லை: ஜி. பரமேஸ்வர்
கர்நாடக முதல்வராக ஹெச்.டி. குமாரசாமி 5 ஆண்டுகளுக்கும் இருப்பது குறித்து இன்னமும் பேசப்படவில்லை என்று அந்த மாநில காங்கிரஸ் தலைவரும், துணை முதல்வருமான ஜி. பரமேஸ்வர் தெரிவித்துள்ளார்.
கர்நாடக முதல்வராக ஹெச்.டி. குமாரசாமி 5 ஆண்டுகளுக்கும் இருப்பது குறித்து இன்னமும் பேசப்படவில்லை என்று அந்த மாநில காங்கிரஸ் தலைவரும், துணை முதல்வருமான ஜி. பரமேஸ்வர் தெரிவித்துள்ளார்.
பெங்களூருவில் செய்தியாளர்களை சந்தித்த அவரிடம், 5 ஆண்டுகளுக்கும் குமாரசாமி முதல்வராக இருப்பாரா? எனக் கேட்கப்பட்டது. இதற்கு பரமேஸ்வர் பதிலளிக்கையில், "அதுகுறித்து இதுவரையிலும் நாங்கள் பேசவில்லை' என்றார். மேலும் அவர் கூறியதாவது:
மதச்சார்பற்ற ஜனதா தளத்துக்கு (மஜத) அமைச்சரவையில் என்ன இலாகாக்களை அளிப்பது, காங்கிரஸூக்கு எந்த இலாகாக்களை பெறுவது என்பது குறித்தும் இதுவரையில் நாங்கள் பேசவில்லை.
இவை அனைத்து குறித்தும் பிறகு பேச்சுவார்த்தை நடத்தப்படும். அப்போது முதல்வர் பதவி காலம், அமைச்சரவை இலாகாக்கள் குறித்து முடிவு செய்யப்படும். கர்நாடகத்தில் நல்லாட்சியை அளிக்க வேண்டும் என்பதுதான் இப்போது எங்களது ஒரே நோக்கமாகும் என்றார் பரமேஸ்வர்.
காங்கிரஸூக்கு துணை முதல்வர் பதவி பெறப்பட்டதும், அமைச்சரவையில் இலாகாக்களை பெறுவது குறித்து நடத்தப்படும் பேச்சுவார்த்தையின் மீதும் காங்கிரஸ் தலைவர்கள் பலர் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுவது பற்றி கேட்கப்பட்டது. அதற்கு பரமேஸ்வர் பதிலளிக்கையில், "ஊடகத்தில் மட்டுமே இதுகுறித்த செய்தியை நான் பார்க்கிறேன்; எனக்கு இந்த பதவியை தாருங்கள் என்று என்னிடமோ அல்லது காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியிடமோ யாரும் கேட்கவில்லை' என்றார்.
கர்நாடக காங்கிரஸ் தலைவர்கள் மத்தியில் கருத்து வேறுபாடு ஏற்பட்டிருப்பதாக கூறப்படுவது குறித்து கேள்விக்கு, "முதல்வர் அல்லது துணை முதல்வர் பதவிக்கான தகுதியுடைய தலைவர்கள் காங்கிரஸ் கட்சியில் பலர் உள்ளனர்; இதுதான் காங்கிரஸ் கட்சியின் சொத்து. கூட்டணி அரசில் யார் எந்தப் பதவியை வகிப்பது என்பது குறித்து கட்சியின் மேலிடம்தான் முடிவெடுக்க வேண்டும்' என்றார்.
காங்கிரஸ் மூத்த தலைவர் டி. சிவகுமார் தனக்கு துணை முதல்வர் பதவி அளிக்கப்படாததால் அதிருப்தியில் இருப்பதாகவும், தனது ஆதரவு எம்எல்ஏக்களுடன் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை நடத்தி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியிருப்பது குறித்த கேள்விக்கு, "ஆலோசனை கூட்டம் நடந்திருக்கவும் வாய்ப்புள்ளது; நடைபெறாமல் இருக்கவும் வாய்ப்புள்ளது. ஆனால் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் அனைவரும் ஒற்றுமையாக உள்ளனர். நம்பிக்கை வாக்கெடுப்பில் நாங்கள் வெற்றி பெறுவது நிச்சயம். இதை மட்டுமே என்னால் தெரிவிக்க முடியும்' என்றார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.