ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன்ஜாமீன் கோரி ப.சிதம்பரம் நேற்று (புதன்கிழமை) தில்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இதற்கிடையில், இந்த வழக்கு தொடர்பான விசாரணைக்கு இன்று ஆஜராகும்படி சிதம்பரத்துக்கு சிபிஐ சம்மன் அனுப்பியிருந்ததது.
இந்நிலையில், முன்ஜாமீன் மனு நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. இந்த விசாரணையின் முடிவில் ஜூன் 3-ஆம் தேதி வரை சிதம்பரத்தை கைது செய்ய இடைக்கால தடை விதித்து தில்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
சிதம்பரம் நேற்று ஏர்செல்-மேக்சிஸ் வழக்கிலும் முன்ஜாமீன் கோரி பாட்டியாலா நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த வழக்கிலும் அவரை ஜூன் 5-ஆம் தேதி வரை கைது செய்ய இடைக்கால தடை விதித்து அந்த நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு
2007-இல் சிதம்பரம் மத்திய நிதியமைச்சராக செயல்பட்டு வந்தார். அப்போது, ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனம் ரூ.305 கோடி வெளிநாட்டு நிதியை பெறுவதற்கு, அந்நிய முதலீட்டு ஊக்குவிப்பு வாரியம் ஒப்புதல் வழங்கியதில் முறைகேடுகள் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. மேலும், இந்த வழக்கில் அந்த நிறுவனத்துக்கு சாதகமாக செயல்பட்டதாக சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் மீதும் குற்றம் சாட்டப்பட்டது.
இதையடுத்து, கார்த்தி சிதம்பரம் கடந்த பிப்ரவரி 28-ஆம் தேதி சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார். பின்னர், அவர் ஜாமீனில் வெளியே வந்தார்.